திருவொற்றியூர்: எண்ணூர் தாழங்குப்பம், உலகநாதபுரம் 6வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று சுமார் 10அடி ஆழம் பள்ளம் தோண்டி, ஏற்கனவே போடப்பட்டிருந்த மழைநீர் கால்வாயை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பக்கவாட்டில் இருந்த 10 அடி உயரம், 20 அடி அகலம் உள்ள மழைநீர் கால்வாய் திடீரென பள்ளத்தில் சரிந்து விழுந்தது.
இதில் உள்ளே இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷ் (26), அம்ரேஷ் (23) ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த சக ஊழியர்கள், எண்ணூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், வார்டு கவுன்சிலர் சிவக்குமார் ஆகியோர் விரைந்து வந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களுடன் இணைந்து மண்ணில் சிக்கிய 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி, இருவரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.