இணைய வாக்குப்பதிவு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்களும் வாக்களிக்க ஆலோசனை: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்களும் இணைய முறையில் ஓட்டுப்போட அனுமதி அளிக்கும் முறை தொடர்பாக ஆலோசனை நடப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது.மாநிலங்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி வெளிநாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 1.15 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இணைய  முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குச் சீட்டு முறையை எளிதாக்குவதற்காக, தேர்தல் நடத்தை விதிகள், 1961-ல் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவை இந்தியத் தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடந்து வருகிறது. தற்போது வெளிநாட்டு வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அவர்கள்  பாஸ்போர்ட் அடிப்படையில் வாக்குச் சாவடியில் நேரில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.