ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளி: பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது

மலாவி,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இதுபற்றி மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும். இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய அமைச்சக அறிக்கை எச்சரித்து இருந்தது. இதற்கேற்ப சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நூற்றுக் கணக்கானவர்களைக் காணவில்லை என்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்து உள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பான அந்த அறிக்கையில், நிலைமை மோசமடைந்து, எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது. இதேபோன்று, பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.