10 வருடம் கழித்து ஒரு ஹிட்டு கொடுத்த சசிக்கு வந்த சோதனை..! அயோத்தி பட கதை திருட்டாம்.?

சசிக்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் அயோத்தி படத்தின் கதை சிங்கப்பூர் சரவணன் என்ற தனது நாவலை தழுவி படமாக்கப்பட்டிருப்பதாக கூறி நாவலாசிரியர் மில்லத் அகமது குற்றம்சாட்டியுள்ளார்.

குட்டிப்புலிக்கு அப்புறம் பாலுமகேந்திராவுக்காக தலைமுறைகள் என்ற படத்தை தயாரித்து வழுக்கிய சசிக்குமார், பாலாவின் தாரைதப்பட்டையால் பெரும் கடனாளியானார்.

அந்த கடன்களை அடைக்க கதாநாயகன், கவுரவ வேடம், குணச்சித்திர நடிகர் என்று 21 படங்கள் நடித்த சசிக்குமாரின் திரை வாழ்க்கையில் 10 வருடங்கள் கழித்து அண்மையில் வெளியான அயோத்தி திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சாதி மதம் என பிரிந்து கிடப்பதை தவிர்த்து சகமனிதனையும் நேசிக்க சொல்லும் அற்புதமான கதையை கொண்ட திரைப்படம் என்று பாராட்டப்பட்ட அயோத்தி திரைப்படத்தின் கதை, தனது சிங்கப்பூர் சரவணன் என்ற நாவலை தழுவி படமாக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய நாவலாசிரியர் மில்லத் அகமது, இது குறித்து எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனிடம் தொலைபேசி மூலம் முறையிட்டதாகவும் ஆனால் அவர் தனது செல்போன் இணைப்பை பாதியில் துண்டித்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.

அயோத்திப் படத்தை மந்திரமூர்த்தி எழுதி இயக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் படக்குழு உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், திரைப்படம் எனது நாவலை தழுவி எடுக்கப்பட்டு இருப்பதால், அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்பது சர்வசாதாரணமாகி விட்டதாக, சினிமா விமர்சகர்கள் மத்தியில் பரவலாக பேச்சு உள்ள நிலையில், ஹிட்டான அயோத்தி படத்தின் இயக்குனர் மீதும் இதே பழி விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.