
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையைப் போன்று இந்த ஆண்டும் ஆந்திராவில் இன்று 3-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். வரும் 30-ம் தேதி பள்ளி கடைசி வேலை நாளாகும். இம்மாதம் 2-வது சனிக்கிழமை வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆனால் இந்த ஆண்டு 2-வது சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோடைக்காலத்தை முன்னிட்டு பள்ளிகளில் கிராம பஞ்சாயத்துகளின் ஆதரவுடன் போதுமான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் திறந்த வெளியிலோ அல்லது மரத்தடியிலோ வகுப்புகளை நடத்துவதை தவிர்க்குமாறும் அவர் எச்சரித்துள்ளார்.