டப்பா டிரேடிங்: சட்ட விரோதமாக மொபைல் செயலி மூலம் ரூ.4672 கோடி பங்கு வர்த்தகம்… ஒருவர் கைது!

பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய இப்போது ஏராளமான மொபைல் செயலிகள் வந்துவிட்டன. எனவே பங்கு வர்த்தகம் மிகவும் எளிதான ஒன்றாகிவிட்டது. ஆனால் சிலர் சட்டவிரோதமாக மும்பை பங்குச்சந்தைக்கு வெளியில் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மும்பையில் ஜடின் சுரேஷ்பாய் மேத்தா என்பவர் சட்டவிரோதமாக அரசின் அனுமதி இல்லாமல் moody என்ற மொபைல் செயலி மூலம் பங்கு வர்த்தகம் செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே மும்பை போலீஸார் தேசிய பங்குச் சந்தை அதிகாரிகளை அழைத்துச்சென்று காந்திவலி மகாவீர் நகரில் உள்ள அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர்.

இந்த ரெய்டில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இது வரை ரூ.4672 கோடி அளவுக்கு சட்ட விரோதமாக பங்கு வர்த்தகம் செய்திருப்பது தெரிய வந்தது. பங்குச்சந்தைக்கு வெளியில் செய்யப்படும் டப்பா டிரேடிங் எனப்படும் பங்கு வர்த்தகத்தில் ஜடின் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது அலுவலகத்தில் இருந்து 50 ஆயிரம் பணம், 5 மொபைல் போன், லேப்டாப், பென் டிரைவ் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக பங்கு வர்த்தகம் செய்வதால் பரிவர்த்தனை கட்டணம், கெபிட்டல் கெய்ன் வரி, மாநில அரசின் முத்திரை தீர்வை, செபி கட்டணம் போன்ற கட்டணத்தை அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றி இருக்கிறார். இதன் மூலம் அரசுக்கு 1.95 கோடி ரூபாய் அளவுக்கு செலுத்தவேண்டியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸார் ஜடினை கைது செய்து இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை போல் இன்னும் எத்தனை பேர் இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து ஜடினிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டப்பா டிரேடிங்கிலும் சில புரோக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமும் பொதுமக்கள் வர்த்தகம் செய்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.