செந்தில் பாலாஜிக்கு வலி நிவாரணி.. இன்னும் ஐசியூவில்தான்.. மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த 13 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதய ரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நீதிமன்ற அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவ குழுவால் கண்காணிக்கப்பட்டு வந்தார். கடந்த புதன்கிழமை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 24 மணி நேரத்திற்கு பிறகு வெண்டிலேட்டர் அகற்றப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காவேரி மருத்துவமனை செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னமும் ஐசியுவில் உள்ளதாக தெரிவித்துள்ளது. வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலி ஏற்படாமல் இருக்க செந்தில்பாலாஜிக்கு வலி நிவாரணி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளதால் நீர்சமநிலையை அதிகரிக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.