சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரூ.195 கோடியில் அமைகிறது புதிய மேம்பாலம்

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்பாலம் கட்ட ரூ.195 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

சென்னையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் வள்ளுவர் கோட்டம் சந்திப்பும் ஒன்றாகும். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சந்திப்பை கடந்து செல்கிறது. இந்நிலையில், இந்தச் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

இதன்படி, சென்னை, வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 570 மீ நீளத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்த மேம்பாலம் பாம்குரோவ் ஹோட்டல் முன்பாக தொடங்கி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடிவடையும் வகையில் அமைக்கப்படவுள்ளது. வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக இது அமைய உள்ளது. குறிப்பாக வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக உத்தமர் காந்தி சாலைக்கு சென்று சேரும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலத்திற்கான நில எடுப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக ரூ.195 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, மேம்பால கட்டுமான பணிகளுக்கு ரூ.67.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நில எடுப்பு பணிகளுக்கு ரூ.113.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு, 8014 ச.மீ அரசு நிலம் மற்றும் 2883 ச.மீ தனியார் நிலம் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் நில எடுப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.