நியோ-மேக்ஸ் மோசடி – தலைமறைவான நபர்களை கைது செய்ய தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை: நியோ- மேக்ஸ் மோசடி வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்ய தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விருதுநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ-மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கரேஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் நிறுவன இயக்குநர்கள் மதுரை அரசரடியைச் சேர்ந்த எஸ்.கமலக்கண்ணன் (55), பொன்மேனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (54), திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த டி.வீரசக்தி (49) உட்பட 10 பேர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் பாலசுப்பிரமணியன், பழனிச்சாமி, அசோக் மேத்தா பஞ்சய், சார்லஸ், தியாகராஜன், கமலக்கண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘நிறுவனத்துக்கு சொந்தமான வீட்டடி மனைகள் அப்படியே உள்ளன. அதை முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்க தயாராக உள்ளோம். இப்பணிக்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்’ என்றார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். இதனால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’ என்றார்.

மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து புகார்தாரர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என உத்தரவிட நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையேற்க மறுத்து, வீட்டடி மனை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.