ஆவின் பால் விலை உயர்வா? அமைச்சர் மனோ தங்கராஜ் பரபரப்பு தகவல்!

பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஆவினின் பால் கொள்முதல் 4 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக கூறினார். ஆவின் பால் விற்பனை சென்னையில் மட்டும் 50 ஆயிரம் லிட்டர் அதிகமாகியிருப்பதாக தெரிவித்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

பால் கொள்முதலுக்கான பணம் தாமதமாக வழங்கப்படுவதாக விவசாயிகள் கூறி வந்த நிலையில் இப்போது வாரம் ஒரு முறை பால் கொள்முதல் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகளை வழங்குவதற்கான கடன் மற்றும் மானியத்தை வங்கிகள் மூலமாக அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவதாக கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழகத்தில் ஆவின் பால் விலை மற்ற நிறுவனங்களை காட்டிலும் 10 முதல் 15 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்படுவதாக கூறினார். இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

மேலும் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய்க்கு நல்ல வரவேற்பு இருந்த போதும் அதற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் வெளி இடங்களில் வாங்கி விற்பனை செய்வதை குறைத்து, உள்ளூரிலேயே வாங்கி விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.