மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாகனங்கள் எண்ணிக்கையும் பல்வேறு தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதன்காரணமாக சுற்றுச்சூழல் பெரியளவில் மாசடைகிறது. இயற்கை வளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனித சமூகத்தால் உண்டு செரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக பருவ காலம் மாற்றமடைகிறது, புவி வெப்பமயமாகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாமல் உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் நேர்கிறது.
அரசும், தன்னார்வலர்களும் அவ்வப்போது இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில்
தமிழ்நாடு அரசு இங்கிலாந்து அரசுடன் இணைந்து, தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.
சென்னைக்கு அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த தாவரவியல் பூங்கா அமைய உள்ளது. காடுகள், அலையாத்தி காடுகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி.
சென்னையில் நடைபெறும் ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் இங்கிலாந்து அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தெரஸ் கோஃபே மற்றும் காலநிலை, எரிசக்தி மற்றும் நிகர உமிழ்வின்மை துறை (Net Zero) அமைச்சர் கிரஹாம் ஸ்டூவர்ட், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இணைந்து முக்கிய திட்டங்களைத் தொடங்கிவைத்தனர்.
லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்புடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பூர்வீக, அரிய வகை, மற்றும் தாவர இனங்களை பாதுகாப்பதே இந்த தாவரவியல் பூங்காவினை அமைப்பதற்கான நோக்கம் ஆகும்.