Russia closes airport after drone attack in Moscow | மாஸ்கோவில்் ட்ரோன் தாக்குதல் விமான நிலையத்தை மூடியது ரஷ்யா

மாஸ்கோ, ஜூலை 31-

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ‘ட்ரோன்’ தாக்குதல் நடத்தியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விருப்பம் தெரிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா, ஓராண்டுக்கு மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கெர்சன், மரியுபோல் நகரங்கள் உருக்குலைந்தன.

இரு நாடுகளுக்கும் இடையே, 500 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் போரில், பெண்கள், குழந்தைகள் உட்பட, ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு, உக்ரைன் படைகளும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள வணிக பகுதியை குறிவைத்து ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக நேற்று உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதில் ஒரு ட்ரோன் மாஸ்கோவின் ஒடின்சோவோ பகுதியில் ரஷ்ய படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் இரண்டு ட்ரோன்கள், எதிர்ப்பு ஏவுகணைகள் வாயிலாக தடுக்கப்பட்டன. அவை இரண்டும் அருகில் உள்ள வணிக வளாகத்தில் விழுந்ததால், இரண்டு கட்டடங்களின் சில பகுதிகள் சேதமடைந்தன.

இந்தத் தாக்குதலில், உயிரிழப்பு எதுவும் இல்லை என, ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் படையின் திடீர் தாக்குதலை அடுத்து, மாஸ்கோவில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஒரு மணி நேரத்துக்கு மூடப்பட்டது.

வேறு நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள், பாதுகாப்பு அம்சங்கள் உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து, மீண்டும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.