திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்தும்படி, தன்னை சந்திக்கும் மத்திய அமைச்சர்கள், பா.ஜ., நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
குஜராத் முதல்வராக, 12 ஆண்டுகள் இருந்த மோடி, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்து வருகிறார்.
உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவிகளில் தொடர்ந்து, 21 ஆண்டுகளை கடந்து விட்ட போதிலும், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில், தன் தாயார் காலமான போது, சில மணி நேரங்களிலேயே இறுதி சடங்குகளை முடித்துவிட்டு வழக்கமான பணிகளுக்கு திரும்பினார்.
ஆனால், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தேசிய நிர்வாகிகளில் பலர், தங்கள் இல்ல திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்தி வருகின்றனர்.
நட்சத்திர ஹோட்டல்களிலும், மத்திய அமைச்சர்களின் இல்லங்களிலும் ஆயிரக்கணக்கானோரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதை பிரதமர் மோடி விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் ஒரே மகளின் திருமணத்தை, நெருங்கிய உறவினர்களை அழைத்து மிக எளிமையாக நடத்தினார்.
இது கட்சி அரசியலை கடந்து, அனைவரது பாராட்டையும் பெற்றது. அதே நேரத்தில் புதுடில்லியில் நடந்த மத்திய அமைச்சர்கள் சிலரது வீட்டு திருமணங்கள் ஆடம்பரமாக நடந்தன.
இதைத் தொடர்ந்து தன்னை சந்திக்கும் மத்திய அமைச்சர்கள், பா.ஜ., முக்கிய தலைவர்களிடம், ‘திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்தினால் தொண்டர்கள், பொதுமக்களிடம் பல்வேறு சந்தேகங்கள் எழும்.
‘அரசியல்வாதி என்றாலே மக்களுடன் நெருங்கி இருக்க வேண்டும். ஆடம்பரம் மக்களுடன் இடைவெளியை அதிகரித்துவிடும்’ என, பிரதமர் கூறியுள்ளார்.
குஜராத் முன்னாள் முதல்வர் சிமன்பாய் படேல், முக்கிய தலைவராக இருந்தபோதும், தன் வீட்டு திருமணங்களை மிக எளிமையாக நடத்தினார். அதுபோல, உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல் சமீபத்தில் தன் இல்ல திருமணங்களை எளிமையாக நடத்தினார்.
– நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்