கலிபோர்னியாவில் கடை வாசலில் LGBTQ கொடி பறக்க விட்ட பெண் படுகொலை

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனது கடை வாசலில் LGBTQ சமூகத்தின் வானவில் நிறக் கொடியை பறக்கவிட்டதால் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள சான் பெர்னார்டினோ கவுன்ட்டி பகுதியில் சிறிய துணிக் கடை வைத்திருந்தவர் லாரா ஆன் கார்லேடன் (66). இவர் தனது கடையின் வாசலில் LGBTQ சமூகத்தின் வானவில் நிறக் கொடியை ஏற்றிவைத்துள்ளார். இதனையடுத்து லாராவின் கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் கொடியை உடனடியாக அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறவே அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து லாராவை நோக்கி சுட்டுள்ளார். லாரா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்த போலீசார் தப்பியோடிய அந்த மர்ம நபரை விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது அந்த மர்ம நபர் போலீசாரை நோக்கி சுட முயன்றுள்ளார். போலீசார் திருப்பிச் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்.

அந்த மர்ம நபர் குறித்த தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட லாரா தன்னை LGBTQ சமூகத்தின் உறுப்பினராக அறிவிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது LGBTQ அமைப்புகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சான் பெர்னார்டினோ கவுன்ட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.