வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிட்னி: ஆஸ்திரேலியா சிட்னியில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை தோற்கடித்து முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது.
பரிசளிப்பு விழாவில் ஸ்பெயின் வீராங்கனைகளின் கழுத்தில் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் சில வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டினார். வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை இறுக்கி அணைத்து உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த வீராங்கனை,”ருபியாலெஸ் நடந்த விதம் பிடிக்கவில்லை,” என பதிவிட்டார். இந்த முத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ருபியாலெசை விமர்சித்த ஸ்பெயின் விளையாட்டுத்துறை அமைச்சர் மிக்யூல் இஸ்ட்டா, சமத்துவத்துறை அமைச்சர் ஐரினே மோன்டேரோ ஆகியோர், அவர் நடந்த விதத்தை ஏற்க முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கண்டித்தனர்.
இதையடுத்து ருபியாலெஸ் மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில், ”நான் செய்தது முற்றிலும் தவறு என ஒப்புக் கொள்கிறேன். உற்சாகம், பரவசத்தின் வெளிப்பாடாக இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர இதில் உள்நோக்கம் இல்லை. என்றாலும் ஹெர்மோசாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.
இதுதொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை துவங்கியுள்ளது. லூயிஸ் ருபியாலெஸ் பதவியை ராஜினாமா செய்யவும் ஸ்பெயின் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் ஒழுங்கு நடவடிக்கை துவங்கியதையடுத்து லூயிஸ் ருபியாலெஸ் தன் ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement