“ஆசிரியையின் தண்டனையில் வகுப்புவாத எண்ணமில்லை”: உ.பி.விவகாரம் குறித்து அமித் மாள்வியா கருத்து

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியை மாணவர் ஒருவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக சக வகுப்புத்தோழர்களை விட்டு அடிக்கச் செய்ததில் வகுப்புவாத எண்ணம் எதுவும் இல்லை என்று பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா தெரிவித்துள்ளார்.

இதற்காக போலீஸாரின் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அவர், அந்த மாணவர் பெருக்கல் வாய்ப்பாடு படிக்காததற்காகவே அந்தத் தண்டனை வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து மாள்வியா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முஸாபர்நகரில் உள்ள பள்ளியின் ஆசிரியை ஒருவர், வாய்ப்பாட படிக்காத, வீட்டுப்பாடம் செய்யாத மாணவர் ஒருவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அம்மாணவரை அடிக்கும் படி சக மாணவரிடம் சொல்லியிருக்கிறார். ஏன் அந்த ஆசிரியர் அவரே எழுந்து சென்று அடிக்காமல், பிறமாணவர்களை அடிக்கச் சொல்லியிருக்கிறார்?. ஊடகங்களால் இதை உறுதிப்படுத்த முடியும்.

ஒரு மாணவரை சக மாணவர்களை வைத்து அடிக்கச் செய்வது என்பது மோசமான சிந்தனைதான் என்றாலும்,எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்ப்பவர்கள் கூறுவது போல் இதில் வகுப்புவாத சிந்தனை எதுவும் இல்லை.

அவர்களின் அக்கறை மாணவரின் நலனை விட அவரது மத அடையாளத்தின் மீத இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. மாணவனைக் காப்பாற்ற முயலாமல், அவர்களின் வெறுப்பு கொள்கையை பரப்பபயன்படுத்துவதற்காக வெட்கப்படுகிறேன். இங்கே போலீஸார் சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறி போலீஸார் பேசும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே முஸாபர்நகர் காவல்கண்காணிப்பாளர் சத்யநாராயணன் பிரஜாபட் இச்சம்பவம் குறித்து கூறுகையில்,”இது தொடர்பாக நாங்கள் பள்ளி முதல்வரிடம் பேசுகையில், தங்களின் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தாத முஸ்லிம் குழந்தைகளின் தாய்மார்களால் அக்குழந்தைகளின் கல்வி பாழாகிறது என்று அந்த ஆசிரியர் கூறியதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ராகுல் கண்டனம்: இதனிடையே, சர்ச்சை வீடியோ தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அப்பாவிக் குழந்தைகளின் மனதில் பிரிவினைவாதம் என்ற விஷத்தை விதைப்பது, அதுவும் பள்ளி எனும் புனிதமான இடத்தை வெறுப்பை வர்த்தகம் செய்யும் சந்தையாக மாற்றுவது என்பது ஒரு ஆசிரியர் செய்யக்கூடாத உச்சபட்ச இழி செயலாகும்.

இது பாஜக ஊற்றிய அதே மண்ணெண்ணெய் தான். இதைக் கொண்டுதான் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பாஜக வெறுப்பைப் பரப்பியுள்ளது.

குழந்தைகள்தான் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அவர்களுக்கு அன்பை போதிக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவில் இருந்தது என்ன? முன்னதாக இணையத்தில் வைரலான வீடியோவில், த்ரபதி தியாகி என்ற ஆசிரியர் 2 ஆம் வகுப்பு சிறுவனிடம் வாய்ப்பாடு சொல்லும்படி சொல்கிறார். அந்தச் சிறுவனால் அதனை சரியாகச் சொல்ல முடியவில்லை. உடனே சக மாணவனை எழுப்பி அந்தச் சிறுவனை கன்னத்தில் அறையச் சொல்கிறார். அந்தச் சிறுவன் அழும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினை சுட்டிக்காட்டி அந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்ததாலே தான் இதுபோன்ற அந்தச் சமூக சிறார்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாகக் கூறி அந்தச் சிறுவனை இன்னும் பலமாகத் தாக்கும்படி கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.