சிபிஎல்: ரோவ்மன் பவல் அதிரடி…முதல் வெற்றியை பதிவு செய்த பார்படாஸ் ராயல்ஸ்…!

செயின்ட் கிட்ஸ்,

கரீபியன் பிரிமீயர் லீக் (சிபிஎல்) கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி ரோவ்மன் பவல் தலைமையிலான பார்படாஸ் ராயல்ஸ் அணியை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் ப்ளெட்சர் 51 ரன், போஷ் 38 ரன், ரூதர்போர்டு 28 ரன் எடுத்தனர்.

பார்படாஸ் அணி தரப்பில் நைம் யங், அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 198 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பார்படாஸ் அணி களம் இறங்கியது. பார்படாஸ் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கார்ன்வால் 38 ரன், மேயர்ஸ் 31 ரன்னும், அடுத்து களம் இறங்கிய ஹோல்டர் 24 ரன், அலிக் அத்தானாஸ் 30 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் பவல் அதிரடியில் மிரட்டினார். அவர் 29 பந்தில் 67 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி அடங்கும். இறுதியில் பார்படாஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 200 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் பார்படாஸ் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 5 ஆட்டங்களில் ஆடியுள்ள செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி இன்னும் தனது வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. அந்த அணி 3 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. 2 ஆட்டங்கள் மழை காரணமாக நடைபெறவில்லை .


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.