மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்தவர் சோம்நாத் ஜெண்டே. இவர் பிம்ப்ரி சின்ச்வாட் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், பிரபலமான ஆன்லைன் கேமிங் தளமான Dream11-ல் இவர் 1.5 கோடி பணம் வென்றிருக்கிறார். இந்த விளையாட்டு குறித்துப் பேசிய சோம்நாத் ஜெண்டே,”இந்த விளையாட்டில் வெற்றிபெற்ற பிறகு ரூ 1.5 கோடி பணமெல்லாம் கிடைக்காது என்றே நினைத்தேன்.

ஆனால் செயலியில் பணம் வந்துவிட்டது. நேற்று ரூ.2 லட்சம் பணப் பரிவர்த்தனை செய்த போது, ரூ.60,000 குறைக்கப்பட்டு, மீதம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் என் கணக்கில் வரவுவைக்கப்பட்டது. மொத்தமாக வென்ற பணத்தை வைத்து எனது வீட்டுக் கடனை அடைக்கப் பயன்படுத்துவேன். மீதிப் பாதியை நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டியை என் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகப் பயன்படுத்துவேன்” எனக் குறிப்பிட்டார்.
ஆனால், காவல்துறையில் பணிபுரியும் போது, இது போன்ற ஆன்லைன் கேம்களில் பங்கேற்கலாமா… இது அரசின் அனைத்து விதிகளைப் பின்பற்றுவதாகுமா… இந்த விளையாட்டு சட்டப்பூர்வமானதா… இவ்வாறு பெறப்பட்ட பணத்தைப் பற்றி ஊடகங்களில் பேச முடியுமா… இதெல்லாம் விதிகளுக்கு உட்பட்டவையா எனப் பல்வேறு கேள்விகள் கிளப்பியிருக்கின்றன. இவை அனைத்து குறித்தும் விசாரிக்க டிசிபி ஸ்வப்னா கோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த விசாரணை அறிக்கை வெளியான பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தெரியவரும் என, காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஹிமான்ஷு சேகர், “Dream 11 இந்தியாவின் முதல் கேமிங் ஸ்டார்ட்அப் நிறுவனம். 2008-ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 110 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக்கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு 1 பில்லியன் டாலர். அதாவது சுமார் ரூ 7,535 கோடி.
ஃபேன்டஸி கேமிங்குக்கும் சூதாட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் காரணமாக கடந்த காலங்களில் இந்த நிறுவனம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டது. ஃபேன்டஸி விளையாட்டுகள் நம் நாட்டில் நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் வரும் பணம் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வருகின்றன. எனவே அவற்றின் சட்டபூர்வ தன்மை குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. இது போன்ற மூன்று நான்கு வழக்குகள் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது, அவை உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

எனவே, கற்பனை விளையாட்டுகள், திறமை விளையாட்டுகள் மற்றும் திறன் விளையாட்டுகள் நம் நாட்டில் சட்டபூர்வமானவை என முடிவுசெய்யப்பட்டது. எனவே, அவற்றை விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை” எனக் குறிப்பிட்டார். ஆனாலும், காவல்துறை அதிகாரி விளையாடியதும், அதன் மூலம் கிடைத்த வருமானம் குறித்தும் காவல்துறை விசாரித்துவருகிறது. விசாரணைக்குப் பிறகே, இந்த வழக்கு குறித்துத் தெரியவரும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.