காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிப்பு – இஸ்ரேல்

காசா,

ஹமாஸ்-இஸ்ரேல் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கு உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா உதவியுடன் கத்தார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது.

கத்தார் இருதரப்பிலும் பிணைக்கைதிகள்- இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், ஹமாஸ் மீதான போரை 4 நாட்களுக்கு நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசாவில் பிணைக்கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிப்பதற்காக 4-நாள் போர் நிறுத்தப்படுகிறது. 46-வது நாளாக போர் நீடித்து வந்த நிலையில் 4 நாட்கள் போரை நிறுத்த இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் ஹமாஸ் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம். 50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இஸ்ரேல் மந்திரிசபை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

காசாவில் 14,100 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் சுமார் 6 ஆயிரம் பேர் குழந்தைகள்- சிறுவர்கள் எனவும், 4 ஆயிரம் பேர் பெண்கள் எனவும் ஹமாஸ் அரசு தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.