
த்ரிஷாவை மதிக்கிறேன் : போலீசில் ஆஜரான மன்சூர் அலிகான் விளக்கம்
நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். தேசிய மகளிர் ஆணையம், மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார், மன்சூர் அலிகான் மீது, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல் உட்பட, இரு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்தனர். இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' வழங்கினர்.
ஆனால் மன்சூர் அலிகான், ‛‛எனக்கு குரல்வளை பாதிப்பு ஏற்பட்டு, தொடர் இருமல் வருவதால், போலீஸ் விசாரணைக்கு இன்று செல்லவில்லை, நாளை செல்கிறேன்'' என முதலில் தெரிவித்து இருந்தார்.
பின்னர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், “த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கவில்லை. என் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரிவித்தேன்” என்றார்.