Cyclone Michaung: `அவசர உதவி எண்கள் அறிவிப்பு' – பொதுமக்களுக்கு அரசு விடுத்த வேண்டுகோள் என்ன?

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் `மிக்ஜாம் புயல்’ வட தமிழக கடற்கரை ஓரமாக நகர்ந்து டிசம்பர் 5-ம் தேதி தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்கிறது. இதன்காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. இவை தவிர சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. இதனால், நிவாரண முகாம்கள், பாதுகாப்பு, மையங்கள், பேரிடர் மீட்புப் படையுடன் தயார் நிலையில் இருக்கும் தமிழ்நாடு அரசு, மக்களுக்கு சில அறிவுரை வழங்கும் விதமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Cyclone Michaung – மிக்ஜாம் புயல்

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், “மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இன்று (03-12-2023) முதல் பொதுமக்கள் பின்வரும் எச்சரிக்கையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவை, “இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

ஒரு சில நாள்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும். கயிறு, மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), அவசர விளக்கு (emergency light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

புயல் எச்சரிக்கை

பலத்த காற்று காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகடுகளாலான மேற்கூரைகள் பறந்து விழுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம். கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் தன்படம் (செல்ஃபி) எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயலின் காரணமாகப் பலத்த காற்றுடன் அதி கன மழை பெய்யும்.

பொதுமக்களுக்கு அரசின் வேண்டுகோள்

இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், பொது மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையில்லாமல் வெளியில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அரசு தெரிவித்திருக்கிறது. முக்கியமாக, அவசர உதவிக்கு `மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070, வாட்ஸ்அப் எண் 94458 69848, மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் 1077‘ எண்கள் அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.