தருமபுரியில் டிஆர்டிஓ கிளை அமைக்க மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் வலியுறுத்தல்

புதுடெல்லி: தருமபுரியில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு( DRDO) கிளையை அமைக்க வேண்டும் என தருமபுரி எம்/பியான என்.வி.செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். மக்களவையின் விதி 377-ன் கீழ் இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார்.

இது குறித்து திமுக எம்பி செந்தில்குமார் வியாழக்கிழமை மக்களவையில் பேசியது: “தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் 2010-ம் ஆண்டு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அமைக்க எடுத்த முயற்சி குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்த பணிக்காக, தருமபுரி மாவட்டம் நெக்குந்தி கிராமத்தில் உள்ள நிலத்தை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் அடையாளம் கண்டு பரிந்துரை செய்யபட்டது. டிஆர்டிஓ நிறுவன அதிகாரிகளும் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

இருப்பினும், டிஆர்டிஓவினரால் முன்மொழியப்பட்ட இத்திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. தருமபுரி தொழில்துறையில் பின்தங்கிய பகுதியாக இருப்பதால், இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாவட்டத்தை தொழில் வளம்மிக்க பகுதியாக மாற்ற உதவும். இந்த டிஆர்டிஒ ஆராய்ச்சி மையம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் மேக் இன் இந்தியா முயற்சிக்கு உந்துதலாக செயல்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தருமபுரி மாவட்டத்தின் மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கவும், முன்மொழியப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். இதற்கான உத்தரவை, டிஆர்டிஓ-வுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.