"முதல்வருக்கு கறுப்பு பிடிக்காது" – பினராயி விஜயனுக்கெதிராக வித்தியாசமாக போராட்டம் நடத்திய கேரள நபர்

கேரள அரசு `நவ கேரளா சதஸ்’ என்ற பெயரில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இதற்காக முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட அனைத்து அமைச்சர்களும், பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட பேருந்தில் கேரளா முழுவதும் சுற்றுப் பயணம் நடத்திவருகின்றனர். அதேசமயம், இந்தக் கூட்டம் தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜ.க-வினரும் இதனைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். `கேரள மாநிலம் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மக்களின் வரிப் பணத்தில் இப்படி முதல்வரும், சக அமைச்சர்களும் பேருந்தில் சுற்றுப்பயணம் செல்வது மிகவும் தவறானது’ எனக் கூறி பல்வேறுவிதமான போராட்டங்களை எதிர்க்கட்சியினர் நடத்திவருகின்றனர்.

நவ கேரளா சதஸ் கூட்டம் – பினராயி விஜயன்

குறிப்பாக, முதல்வர் செல்லும் அனைத்து பகுதிகளிலும் எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடிகளைக் காட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டங்களை நடத்துவதால், கறுப்பு நிறமுள்ள எல்லா விதமான பொருள்களையும் கூட்டம் நடக்கும் இடங்களிலிருந்து போலீஸார் அகற்றி வருகின்றனர். சமீபத்தில்கூட, ஆலப்புழாவில் முதல்வருக்கு நேராகக் கறுப்புக் கொடி காட்டிய நபர்களை போலீஸார் சரமாரியாகத் தாக்கியதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இப்படியான சூழலில், இந்தக் கூட்டத்துக்கு எதிரான தனி மனிதரின் போராட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதாவது, கொல்லம் மாவட்டம், தலவூரில் ரஞ்சித் என்பவர் உடம்பு முழுக்க வெள்ளை நிறம் பூசி முற்றிலும் வித்தியாசமான ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார். முன்னதாக, நவ கேரளா சதஸ் கூட்டங்களில் பங்கெடுக்க நேற்று கொல்லம் மாவட்டம் வந்திருந்தார் முதல்வர். அப்போது, பத்தனாபுரம் பகுதியில் முதல்வர் கடந்துசெல்லும் சாலையோரம், வித்தியாசமாகத் தலை முதல் கால் வரை வெள்ளை நிறத்தைப் பூசி ரஞ்சித் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதுகுறித்து ரஞ்சித், “கறுப்பு நிறமுடைய எதைப் பார்த்தாலும் முதல்வருக்குப் பிடிக்காது. பொதுக் கூட்டங்களில் கறுப்பு சட்டை அணிந்து சென்றாலோ, கறுப்பு முகக்கவசம் அணிந்து சென்றால்கூட கைது செய்கின்றனர். எனவே, பிறவியிலேயே கறுப்பு நிறமுடைய என்னைப் பார்த்தாலும் போலீஸார் கைது செய்துவிடுவார்கள். அதனால்தான் தலை முதல் கால் வரை உடம்பு முழுவதும் வெள்ளை நிறம் பூசி வந்திருக்கிறேன். எனது சட்டை, வேட்டி, கைப்பேசி, ஏன் உள்ளாடைகூட வெள்ளை நிறத்தில்தான் அணிந்து வந்துள்ளேன். என் கண் மட்டும் தான் கறுப்பு, அதைக்கூட முதல்வர் வரும்போது மூடிவிடுகின்றேன்” என்று நகைப்பாகக் கூறினார்.

இந்த விசித்திரமான போராட்டத்தைக் காண ஏராளமான மக்களும் அங்குத் திரண்டனர். இருப்பினும், ரஞ்சித்தின் இந்தப் போராட்டம் அதிகம் நேரம் நீடிக்கவில்லை. முதல்வர் வரும் வழியில் இப்படி வெள்ளை நிறம் பூசி ஒருவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு அவரை குண்டுகட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

தலவூர் ரஞ்சித்

பா.ஜ.க-வைச் சேர்ந்த தலவூர் பஞ்சாயத்து உறுப்பினரான இவர், இதற்கு முன்பும் இப்படிப்பட்ட வித்தியாசமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார். கடந்த மாதம்கூட, தனது பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதை எதிர்த்து, 9,737 ரூபாய் மின்கட்டணத்தைச் சில்லறை நாணயங்களாகக் கொடுத்து அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு எதிரான இந்த வித்தியாசமான போராட்டமும் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.