சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவரா? தோனியின் பிளானை சொன்ன அம்பத்தி ராயுடு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இம்முறை களமிறங்கும் தோனி (MS Dhoni), விரைவில் தனக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தப்போவது யார்? என அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு தோனி ஏறத்தாழ ஓய்வு பெற்றுவிடுவார். அவருக்கு முழங்கால் பிரச்சனை இருப்பதால் கடந்த ஐபிஎல் தொடரின்போதே களத்தில் கீப்பிங் செய்ய மிகவும் கஷ்டப்பட்டார். இருப்பினும் அதே பிரச்சனையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக (Chennai Super Kings) களமிறங்கி சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார். ஆனால் அவர் ஓய்வு பெற்றுவிட்டால் அடுத்த கேப்டன் யார்? என்பது தான் பெரிய கேள்வியாக இருக்கிறது. 

ஜடேஜாவுக்கு ஒருமுறை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு, அது வொர்க்அவுட் ஆகாததால் வேறொரு இளம் வீரரை கேப்டன் பொறுப்பு நியமிக்கலாம் என்பது தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐடியா. அது யாராக இருக்கும் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ அணியில் விளையாடிய அம்பத்தி ராயுடு முதன்முறையாக வெளிபடையாக பேசியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்? (Who is CSK Next Captain?) என்ற கேள்விக்கு பதிலளித்த அம்பத்தி ராயுடு, ” இளம் வீரர் ஒருவரையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக நியமிக்கும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ” என்னை பொறுத்த அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனி இன்னும் 4, 5 ஆண்டுகள் விளையாட வேண்டும். அவர் விளையாட வேண்டும் என்ற ஆசை ரசிகர்களைப் போலவே எனக்கும் இருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த சரியான ஒரு வீரரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் தோனியின் இடத்தை நிரப்புவது கடினம். இருப்பினும் அந்த இடத்துக்கு வேறொருவர் வந்தாக வேண்டும் என்ற சூழலில் இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்த வீரர் இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவராக இருக்க வேண்டும். அந்தவகையில் பார்க்கும்போது ருதுராஜ் கெய்க்வாட் சரியான தேர்வாக இருக்கும். 

இளம் வீரர். தோனியுடன் நிறைய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். அவருக்கு அனுபவம் இருக்கிறது என்பதால் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை நியமிக்கலாம்” என தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய கேப்டன் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.