திரிணமூல் எம்.பி. மிமிக்ரி செய்த விவகாரம்: ஜெகதீப் தன்கரிடம் வேதனை தெரிவித்த பிரதமர்

புதுடெல்லி: மாநிலங்களைவைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் பேச்சை, திரிணமூல் எம்.பி கல்யாண் பானர்ஜி கேலி செய்து நடித்து காட்டிய சம்பவத்தை எம்.பி.க்கள் சிலர் ரசிக்கும் வீடியோ வெளியான சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். எம்.பி.க்கள் விதிகளுக்கு உட்பட்டு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்பு வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட 141 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் பேச்சை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி கிண்டல் செய்து நடித்து காட்டினார். இதை கேட்டு மற்ற எம்.பி.க்கள் சிரிக்கின்றனர். இந்த காட்சியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ காங்கிரஸ் கட்சியின் இன்ஸ்டாகிராமில் வெளியாகி பின் நீக்கப்பட்டது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளதாவது: எம்.பி.க்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் என்னை மிமிக்ரி செய்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் தனது ஆழ்ந்த வேதனையை தெரிவித்தார். இதுபோன்ற அவமதிப்புகளை அவர் கடந்த 20 ஆண்டுளாக சந்தித்து வருவதாகவும், ஆனால் அரசியல் சாசன பதவியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவரைவமதிப்பது துரதிருஷ்டவசமானது என பிரதமர் மோடி கூறினார். ‘‘இது போன்ற சம்பவங்கள் எனது கடமையை செய்வதை தடுக்காது’’ என்று நான் பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். இவ்வாறு தன்கர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணியம் காக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஜெகதீப் தன்கர் அவமதிப்பு செய்யப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்தேன். எம்.பி.க்கள் விதிகளுக்கு உட்பட்டு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நாடாளுமன்ற பாரம்பரியம். அதை எம்.பி.க்கள் பின்பற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ஜெகதீப் தன்கர், ‘‘என்னை அவமதிப்பு செய்வதை ராகுல் காந்தி வீடியோ எடுத்து காங்கிரஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது மாநிலங்களவை தலைவரையும், என்னை தனிப்பட்ட முறையிலும் புண்படுத்தியது போன்றது. இதன் மூலம் விவசாய குடும்பம் மற்றும் ஜாட் பிரிவைச் சேர்ந்த என்னை புண்படுத்தியுள்ளீர்கள். நாடாளுமன்றத்தையும், குடியரசுத் துணைத் தலைவர் பதவியையும் இனி புண்படுத்தினால், பொறுத்துக் கொள்ள மாட்டேன்’’ என்றார். மேலும், மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பார்த்து, ‘நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்’’ என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த கார்கே, ‘‘மாநிலங்களையில் பேசுவதற்கு எனக்கு கூட அடிக்கடி அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்காக நான் எனது தலித் பின்னணியை தொடர்பு படுத்தி பேசவா முடியும்? மற்ற உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டியவரே இது போல் ஜாதி பெயரை கூறி மக்களை தூண்ட கூடாது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.