`அவசர நிலை காலத்தின்போது தொலைத்தொடர்பு சேவைகளை மத்திய மாநில அரசுகள் விரும்பினால் கட்டுப்படுத்தலாம், கையகப்படுத்தலாம்’ என்ற அம்சத்தோடு, புதிய தொலைத்தொடர்பு மசோதா-2023 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தேசியப் பாதுகாப்பு நலனை கருத்தில்கொண்டும், பயனாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டும் இந்த புதிய மசோதாவை தாக்கல் செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களின் சஸ்பெண்டுடன் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதிய தொலைத்தொடர்பு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய தொலைத்தொடர்பு மசோதா – 2023, தொலைத்தொடர்பு துறையை நிர்வகிக்கும் 138 ஆண்டு பழமையான இந்திய தந்தி சட்டத்தை முற்றிலுமாக மாற்றுகிறது. மேலும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) அதிகாரத்தையும் கட்டுப்படுத்துகிறது.
அவசர காலங்களில் அரசின் வசம் தொலைத்தொடர்பா?
இந்த புதிய தொலைத்தொடர்பு சட்டமானது, தேசிய பாதுகாப்பு நலன் கருதி தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அரசாங்கத்தை அனுமதிக்கிறது. அதாவது, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட எந்தவொரு பொது அவசரநிலைகளின் போதும் அல்லது பொது பாதுகாப்பு நலன் கருதியும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை அரசாங்கமே தற்காலிகமாக கையகப்படுத்தவும், நிர்வகிக்கவும், இடைநிறுத்தவும் அனுமதியளிக்கிறது. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளோ அல்லது அரசுகளால் சிறப்பு அங்கீகாரம் பெற்ற எந்தவொரு அதிகாரிகளோ, ஆணையமோ இந்தத் தொலைத்தொடர்பு சேவை அமைப்பை தற்காலிகமாக எடுத்துக்கொள்ளும் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவார்கள். தவிர, இதுபோன்ற எமெர்ஜென்சி காலங்களில் குற்றச்செயலுக்கான தூண்டுதலைத் தடுக்கும் வகையில், பயனாளர் அனுப்பும் குறிப்பிட்ட செய்திகளை தடுத்து நிறுத்தவும், அதில் குறுக்கிடவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

பொதுமக்கள், பயனாளர்களின் பாதுகாப்பு எப்படி?
மேலும், இந்த மசோதா தனிப்பட்ட பயனாளர்களின் தகவல் பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதாகவும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவிக்கிறது. அதாவது, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் `ஸ்பேம்’ அழைப்புகள், தேவையற்ற செய்திகளிலிருந்து பயனாளர்களைப் பாதுகாப்பதற்கும், இணைய பாதுகாப்பை உறுதிசெய்வதற்குமான புதிய விதிகளை அரசாங்கம் கொண்டுவருவதற்கு அதிகாரம் அளிக்கப்படும் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக, ஒரு தனி நபரை ஏமாற்றும் விதமாக, மோசடியாக சிம் அல்லது பிற தொலைத்தொடர்பு தகவல்களை முறைகேடாகப் பெறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க மசோதா முன்மொழிகிறது.
ஓடிடி பிளேயர்களுக்கு பாதிப்பா?
இந்த மசோதாவின் கீழ், அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களின் செய்திகள், தேசிய பாதுகாப்பு விதியின் கீழ் தடைசெய்யப்பட்டாலன்றி, இடைமறிப்பதில் இருந்து (முறைகேடாக தகவல் ஒட்டுக்கேட்பிலிருந்து) பாதுகாக்கப்படும். அதேபோல, வாட்ஸ்-அப், டெலிகிராம், ஆப்ஸ் மற்றும் OTT பிளேயர்கள் ஆகியவை தொலைத்தொடர்பு விதிமுறைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்தப் புதிய மசோதா, நுகர்வோர் நலன், சந்தைப் போட்டி, டெலிகாம் நெட்வொர்க்குகளின் இருப்பு அல்லது தொடர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நுழைவுக் கட்டணம், உரிமக் கட்டணம், அபராதம் போன்றவற்றை தள்ளுபடி செய்யும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு அளிக்கிறது. தவிர, வளர்ந்துவரும் டிஜிட்டல் யுகத்துக்கேற்ப, காலாவதியான சட்டங்களை மாற்றியமைத்து, இணைய உலகின் ஒழுங்குமுறை சட்டத்தை உருவாக்கி, டிஜிட்டல் பெருக்கத்தோடு வரும் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வுகாணும் வகையில் இந்த சட்டம் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.