செலவுக்கு பயந்து, அ.தி.மு.க சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிக்காரர்கள் யாரும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால், மான்செஸ்டர் தொகுதியைக் குறிவைத்து வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறாராம் மணியானவரின் உறவுக்காரரான ‘பைக்’ பிரமுகர். “ஏன்ணே இந்த முடிவு?” எனக் கேட்கும் நெருக்கமானவர்களிடம், “தேர்தலில் வெற்றிபெற்றால் டெல்லிக்குப் போகலாம். இல்லையென்றால் இதைவைத்தே வரும் சட்டமன்றத் தேர்தலிலும் சீட் வாங்கி ஜார்ஜ் கோட்டைக்குப் போய்விடலாம். செலவு மணியானவர் பொறுப்பு… எப்படிப் பார்த்தாலும் நமக்கு லாபம்தான்” என்கிறாராம் புன்னகையுடன். தேர்தலை மனதில்வைத்து சீனியர்களையெல்லாம் தன் ஆதரவாளர்களாக மாற்றுவது, ஆளுங்கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை அ.தி.மு.க-வில் இணைப்பது என இப்போதே காய்நகர்த்தவும் தொடங்கிவிட்டாராம் அவர். “அவர் அரசியல் கத்துக்கிட்ட இடம் அப்படி” என்று மூக்கில் விரல்வைக்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை நிர்வாகிகள்.
இலங்கையோடு கடல் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் அந்தக் கடற்கரை மாவட்டத்தில், ஆளுங்கட்சி மா.செ-மீது புகார்களை அடுக்கியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். “அமைச்சருக்கு எதிராக அரசியல் செய்கிறார்; பக்குவம் இல்லாமல் செயல்படுகிறார்; கட்சிக்காரர்களைக் கண்டுகொள்வதில்லை; குறிப்பிட்ட சமூகத்தினரை உதாசீனப்படுத்துகிறார்; மாவட்ட நிர்வாகத்தில் தன் குடும்ப உறுப்பினர்களை ஆதிக்கம் செய்ய அனுமதித்திருக்கிறார்” என நாள்தோறும் தலைமைக் கழகத்துக்குப் புகார்கள் பறந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே அவரை போதைப்பொருள் கடத்தியவர்களோடு தொடர்புபடுத்தி சர்ச்சை உருவானபோது, அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகிக்கும் தென்மாவட்ட அமைச்சரின் தயவால் தப்பித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மா.செ-மீது மீண்டும் இப்படியான புகார்கள் வரிசைகட்டுவதால், இந்த முறையாவது தலைமையின் நடவடிக்கைக்கு ஆளாவாரா என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறது எதிர்க்கோஷ்டி!
மிக்ஜாம் புயலில் சென்னை பாதிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பெயருக்குத் தலையைக் காட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. “அப்படிச் செய்திருக்கக் கூடாது’’ என எடப்பாடிக்கு நெருக்கமான அந்த ‘முன்னாள் மேதகு’ சுட்டிக்காட்டினாராம். “இப்போதைக்குக் கூட்டணி பலமாக இல்லை. தென்மாவட்ட மக்கள் மத்தியில் நமக்கான ஆதரவும் பெருகவில்லை.

அப்படியிருக்கும்போது மக்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இயற்கையாகப் பார்த்து ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பையும் நழுவவிட்டால் எப்படி?” எனக் கொஞ்சம் காரமாகவே பேசிவிட்டாராம். இதைத் தொடர்ந்து தென்மாவட்டங்களுக்குப் புறப்பட்டுச் சென்றார் எடப்பாடி. எப்படியும் இரண்டு, மூன்று நாள்களாவது சுற்றுப்பயணம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல ஒரே நாளில் தலையைக் காட்டிவிட்டுத் திரும்பிவிட்டாராம் எடப்பாடி.
தலைநகருக்கு அருகிலிருக்கும் கோயில் மாவட்டத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி ஒருவரும், இன்ஸ்பெக்டர் ஒருவரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணி குறித்து டி.ஜி.பி அலுவலக காக்கிகளிடம் விசாரித்தால், “ரெளடிகள் வேட்டை குறித்த பேச்சு காவல்துறையில் எழுந்ததுமே, அந்த டி.எஸ்.பி-யும், இன்ஸ்பெக்டரும் சம்பந்தப்பட்ட ரெளடியைத் தொடர்புகொண்டு, கைது நடவடிக்கை குறித்து அலர்ட் செய்திருக்கிறார்கள். கூடவே, இந்தக் கைதிலிருந்து தப்ப உதவுகிறோம் எனச் சொல்லி பேரமும் பேசியிருக்கிறார்கள். ஆனால், பேரம் படியவில்லையாம். இதையடுத்து இருவரும் தீவிரமாகச் செயல்பட்டு அந்த ரெளடியைக் கைதுசெய்திருக்கிறார்கள்.
கடுப்பான ரெளடித் தரப்பு, அந்த அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ பதிவு ஆதாரத்துடன் டி.ஜி.பி அலுவலகத்துக்குப் புகாராக அனுப்பிவிட்டது. அதைப் பார்த்த பிறகே, சம்பந்தப்பட்ட இருவரையும் இடமாற்றம் செய்ததோடு, இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது எனவும் விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது டி.ஜி.பி அலுவலகம்” என்கின்றனர்.
அ.தி.மு.க-வில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மா.செ என முடிவு செய்து சில மாவட்டங்களைப் பிரித்தது தலைமை. ‘நிர்வாகரீதியில் எடுக்கப்பட்ட முடிவு’ என இதைத் தலைமை சொன்னாலும், தங்களின் அதிகாரத்தைக் குறைக்கும் உள்ளடி வேலையாகவே இதைக் கருதுகிறார்களாம் சில மா.செ-க்கள். அப்படி அதிருப்தியில் இருக்கும் வடக்கு மண்டலத்தின் மா.செ ஒருவர், முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி சொந்த மாவட்ட நிர்வாகிகள் வரை எல்லோரையும் சகட்டுமேனிக்கு அவதூறாகப் பேசிவருகிறாராம். அவர் பேசுவதையெல்லாம் நோட்ஸ் எடுத்து, தலைமையிடம் ரிப்போர்ட்டாகச் சமர்பித்திருக்கும் மாவட்ட நிர்வாகிகள், ‘‘புதிதாகப் பதவிக்கு வந்தவர்கள் குறித்து, போகும் இடமெல்லாம் புறம் பேசுகிறார். அவதூறு பரப்பி, அவர்களின் பதவிகளுக்கு வேட்டுவைக்கப் பார்க்கிறார். எனவே, அவருக்கு வாய்ப்பூட்டுப் போடுங்கள். இல்லையென்றால் நிர்வாகிகள் சோர்வடைந்துவிடுவார்கள்’’ எனக் குமுறியிருக்கிறார்களாம்!