மூணாறு:கேரளா இடுக்கி அணையை பார்க்க கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.31 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து மின்வாரியம் உத்தரவிட்டது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும். மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டது.
ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். கடந்தாண்டு இடுக்கி மாவட்டம் உருவாகி 50 வது ஆண்டையொட்டி ஆண்டு முழுவதும் அணையை பார்க்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துமீறல்
இந்தாண்டு ஓணம்பண்டிகைக்கு பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜூலை 22ல் மதியம் 3:15 மணிக்கு மர்ம நபர் செருதோணி அணையில் அத்துமீறி நுழைந்து ‘ஹைமாக்ஸ்’ லைட் டைமர், எர்த் ஒயர் ஆகியவற்றை இணைத்து பூட்டியதுடன் ஷட்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ள இரும்பில் ஒரு வித திரவம் ஊற்றப்பட்டது செப். முதல் வாரத்தில் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியால் மர்ம நபர் அத்துமீறி நுழைந்ததாக தெரியவந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அனுமதி
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் இடுக்கி அணையை பார்க்க பயணிகளுக்கு டிச.31 வரை அனுமதி அளித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. வாராந்திர பராமரிப்பு பணிகளுக்காக புதன் கிழமை தோறும் பயணிகளுக்கு அனுமதி இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement