பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கிறது குரும்பலூர் என்னும் ஊர். இந்தப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல், அதே பள்ளியில் வேப்பந்தட்டை கிராமத்தில் வசித்து வரும் இன்ஜினியர் பாலமுருகன் என்பவரின் மனைவி தீபா, கணித ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 15 -ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற இவர்கள் இருவரும், மாலையில் பள்ளி முடிந்தபிறகு வீடு திரும்பவில்லை. இதனால், ஆசிரியர் வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல், ‘பள்ளிக்குச் சென்ற எனது மனைவி வீடு திரும்பவில்லை. காலையில் காரில் சென்றார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை” என்று தீபாவின் கணவர் பாலமுருகன் வி.களத்தூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இதையடுத்து, இந்த இரண்டு புகார்களுக்கும் இரண்டு காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை நகரில் ஒரு கார் மர்மமாக நிற்பதாக தகவல் கிடைத்தது. அங்குள்ள போலீஸாரின் விசாரணையைத் தொடர்ந்து, அந்த கார் ஆசிரியை தீபாவின் கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த தகவல் கிடைத்ததும், வி.களத்தூர் காவல் நிலைய போலீஸார் கடந்த மாதம் 29-ம் தேதி கோவைக்குச் சென்று அந்த காரை சோதனை செய்தனர்.

அதில், தீபாவின் தாலி, 2 குண்டு மற்றும் தீபா, வெங்கடேசன் ஆகியோரது செல்போன்கள், ஏ.டி.எம் கார்டுகள், ரத்தக்கரை படிந்த சுத்தியல், அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்ததால், போலீஸார் அவற்றைக் கைப்பற்றினர். ஆனால், மாயமான அந்த ஆசிரியர்கள் இருவர் பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பானதால், மாயமான ஆசிரியர்களை தேட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 2 பேரையும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
ஆனால், அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசனின் உறவினர்கள் பிரபு, ராஜா, நண்பரான ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் தேனிக்கு சென்று அங்கு இருந்த வெங்கடேசனை சொந்த ஊரான குரும்பலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர், பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியனுக்கு ரகசியமாக தகவல் கொடுத்து குரும்பலூருக்கு அழைத்துள்ளனர். ஆனால், பாண்டியன், ‘அங்கு வரமுடியாது. இப்போது, எனக்கு வேலை இருக்கிறது. மறுநாள் ஸ்டேஷனுக்கு அழைத்து வாங்க’ என்று அலட்சியமாக பதில் சொன்னதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், இந்த தகவல் தெரியவந்த வெங்கடேசன், குரும்பலூரில் இருந்து தப்பி சென்றார். அதேபோல், தீபாவின் கணவர் இன்ஜினியர் பாலமுருகன், தனது மனைவியை காணவில்லை என கடந்த மாதம் 18-ம் தேதி புகார் கொடுத்தும், வி.களத்தூர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ முஹமது ஜியாவுதீன் வழக்குப்பதிவு மட்டும் செய்துவிட்டு, மாயமான ஆசிரியர்களை தேடும் பணியை துரிதப்படுத்தாமல் அலட்சியம் காட்டியிருப்பதாக தெரிகிறது. இந்த தகவலும், தனிப்படை போலீஸாருக்கு தெரியவந்ததால், இந்த விவகாரம் தொடர்பான தகவலை பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி ஷ்யாம்ளாதேவி கவனத்துக்கு கொண்டுச் சென்றனர்.
இதையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்ததாக பெரம்பலூர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ பாண்டியன், வி.களத்தூர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ முஹமது ஜியாவுதீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். இரண்டு ஆசிரியர்கள் மாயமான வழக்கில் சரியாக நடவடிக்கை எடுக்காத இரண்டு போலீஸார் மீது எஸ்.பி நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம், பெரம்பலூர் மாவட்ட போலீஸார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.