தமிழ்நாட்டில் இந்த மாத தொடக்கத்திலும், மத்தியிலும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பெண்கள், நிவாரணப் பணிகளில் மத்திய அரசின் பங்கு குறித்தும் பேச, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக அரசு, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள்மீது நிர்மலா சீதாராமன் அடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் கோரிய நிதியைத் தராமல், பேரிடரில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய நிதியமைச்சர் அவமானப்படுத்தியிருப்பதாக, நிர்மலா சீதாராமனை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து, தங்கம் தென்னரசு தனது அறிக்கையில், “தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தான் பேராபத்து தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் மக்களைக் காக்கும், மீட்கும் பணி தொடர்ந்து கொண்டு வருகிறது. ஊடகங்களும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் செய்திகளுக்குத்தான் அதிக முக்கியத்தும் அளித்து காட்சிகளை வெளியிட்டு வருகிறார்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த இந்த பாதிப்புச் செய்தி, இந்தியாவில் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை. அவர்தான் இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன். ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்துள்ள பதில் தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவதாகும்.
மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கடந்த 19-ஆம் தேதி விளக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 20 நிமிடங்கள் முதலமைச்சர் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர், ‘இது தொடர்பான கோரிக்கை மனு கொண்டு வந்துள்ளீர்களா?’ என்று கேட்டார். ஆம் என்றதும் அதனை வாங்கி வைத்துக் கொண்டார். ‘உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன். இதைவிட எனக்கு வேறு பணி இல்லை’ என்று பிரதமர் சொன்னார். தமிழ்நாட்டில் டிசம்பர் 4, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் பெய்த மழை என்பது வரலாறு காணாதது ஆகும். 50 ஆண்டுகள் கழித்து பெய்கிறது, 100 ஆண்டுகள் கழித்து பெய்கிறது என்று சொல்லத் தக்க மழையளவு ஆகும். எனவேதான் அது ஏற்படுத்திய பாதிப்பு என்பது மிகமிக அதிகமானது. இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத்தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதலமைச்சர் அவர்கள் கோரியிருக்கிறார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக (Calamity of severe nature) அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடி ரூபாயை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும்.
இந்த இரண்டும் கிடையாது என்பதைத்தான் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார். தி.மு.க அரசையும், முதலமைச்சரையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். பாதிப்பையும், பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்கள் அடைந்த துயரங்களையும், அனுபவிக்க இருக்கும் துன்பங்களையும் கவனத்தில் கொள்ளாமல் ‘ தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது, அப்படி இதுவரை அறிவித்தது இல்லை’ என்று சொல்வதன் மூலமாக தனது இரக்கமற்ற குணத்தை நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மக்கள் துன்ப துயரங்களை அடைந்து வரும் நேரத்தில் அவர்களைக் கேலி செய்வதைப் போல இருக்கிறது அவர் அளித்திருக்கும் பேட்டி. மத்திய பாதுகாப்புப் படை ஒத்துழைக்கவில்லை என்றோ, ராணுவம் வரவில்லை என்றோ நாங்கள் குற்றச்சாட்டை வைக்கவுமில்லை. நிதியமைச்சர் சொன்னது புதிய செய்தியும் அல்ல. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளிக்கிறார் என்று கேள்விப்பட்டதும், தமிழ்நாட்டுக்கான நிதியை அறிவிக்கவே அவர் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக நான் முதலில் நினைத்தேன். ‘நிதி கிடையாது’ என்று சொல்வதற்காக எதற்காக பேட்டி தர வேண்டும்…
தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.21 ஆயிரம் கோடி. ஆனால், அதில் இதுவரை வந்திருப்பது ரூ.450 கோடி மட்டுமே. இதுவும் தமிழ்நாடு அரசுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய நிதி தானே தவிர, இப்போது ஏற்பட்ட புயல் – மழை – வெள்ளச் சேதங்களில் இருந்து மீட்க தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல. இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்துக்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்துக்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு (Finance Commission) தீர்மானிக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 300 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும். ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப்படும்.

ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும். சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் NDRF-ல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய பா.ஜ.க அரசு எத்தகைய அலட்சியத்தோடு நடத்துகிறது என்பதற்கு உண்மையான எடுத்துக்காட்டு இது.
2015-ம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்தத் தொகை என்பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில் ஒன்றிய பா.ஜ.க அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே ஆகும். அதாவது பா.ஜ.க தமிழ்நாட்டில் வைத்திருக்கும் வாக்கு சதவிகிதத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்குவார்கள் போலும். தமிழ்நாடு குறித்தும், மக்கள் குறித்தும் துளியும் அக்கறையற்றதாக ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. இதனை மறைப்பதற்காக நிருபர்கள் மீது பாய்ந்துள்ளார் நிதியமைச்சர். நிதியமைச்சர் தனது பேட்டியில், பிரதமர் – முதலமைச்சர் சந்திப்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

‘ஒரு நாள் முழுக்க டெல்லியில் இருந்த முதலமைச்சர், போகிற போக்கில் சந்தித்துக் கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார்’ என்று சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். மாண்புமிகு இந்தியப் பிரதமர் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கான நேரத்தை அவர் தான் தீர்மானிப்பார் என்பதைக் கூட தெரியாதவராக ஒருவர் நிதியமைச்சராக இருப்பது வேதனை தருகிறது. மதியம் 12.30 மணிக்கு வரலாம் என்று நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு வரலாம் என்று நேரத்தை மாற்றியது பிரதமர் அலுவலகம். எனவே, இரவில் சந்திக்க நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம் தானே தவிர, முதலமைச்சர் அல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் யாரிடமும், எந்த சூழலிலும் தோரணை காட்டக் கூடியவர் அல்ல.
‘மழை பெய்யும் போது முதலமைச்சர் எங்கே இருந்தார்?’ என்று கேட்கிறார் நிர்மலா சீதாராமன். ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்துக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ‘இந்தியா’ என்றாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனைத்தான் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தியிருக்கிறார். பிரதமரைச் சந்திப்பதற்காகவும் சேர்த்தேதான் முதலமைச்சரின் டெல்லி பயணம் திட்டமிடப்பட்டது. பற்றி எரிந்த மணிப்பூருக்கு ஒன்றிய மாண்புமிகுக்கள் ஒரு தடவையாவது போனார்களா…

மயிலாப்பூருக்கு வந்து காய்கறி வாங்கி போட்டோ எடுத்துக் கொண்ட நிதியமைச்சர், 4-ஆம் தேதி புயல் – வெள்ளப் பாதிப்புகளைப் பார்க்கவாவது ஒரு முறை சென்னை வந்தாரா… என்று எங்களாலும் கேட்க முடியும். டெல்லி சென்ற ஒரே ஒரு நாள் தவிர – அனைத்து நாள்களும் மக்களோடு மக்களாகத்தான் இருந்தார் முதலமைச்சர். ‘ஒரே நாடு – ஒரே தேசம்’ என்பதில் உண்மையான அக்கறை இருப்பவராக இருந்தால் தமிழ்நாட்டில் நடந்த பாதிப்புகளை கடும் பேரிடராக அறிவியுங்கள், தமிழ்நாடு அரசு கோரும் நிவாரண நிதியை விடுவியுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.