ஆன்லைன் மோசடிகளால் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள் போன்று மிரட்டுவது போல் பேசி சில நேரங்களில் மோசடி செய்து விடுகின்றனர். அது போன்ற மோசடியில் பாலிவுட் பிரபலங்கள் சிக்குவது அடிக்கடி நடந்து வருகிறது. புதிதாக அஞ்சலி பாட்டீல் என்ற நடிகை ஆன்லைன் மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழந்துள்ளார். அஞ்சலி பாட்டீலுக்கு கடந்த வாரம் ஒரு போன் அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் தான் கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் தாய்லாந்திற்கு ஒரு பார்சல் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டதாகவும், பார்சலில் உங்களது ஆதார் கார்டு நம்பர் கூட இருப்பதாகவும், உங்களது தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க மும்பை சைபர் பிரிவு போலீஸாரை தொடர்பு கொள்ளும்படி அந்த நபர் கேட்டுக்கொண்டார்.

சிறிது நேரத்தில் ஸ்கைப் மூலம் அஞ்சலிக்கு மேலும் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை பானர்ஜி என்றும், மும்பை சைபர் பிரிவில் இருந்து பேசுவதாகவும் அந்த நபர் குறிப்பிட்டார். மேலும் உங்களது ஆதார் கார்டு மூன்று வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பணமோசடி நடந்திருப்பதாகவும் நடிகையை பயமுறுத்தினார். இது தொடர்பான தகவல்களை பார்க்க பிராஸசிங் கட்டணமாக ரூ.96,525 செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். நடிகையும் பணத்தை அனுப்பினார். உடனே பணமோசடியில் சில வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க மேலும் பணம் அனுப்பும்படி அந்த நபர் நடிகையிடம் கேட்டுக்கொண்டார். நடிகையும் மொத்தம் ரூ.5.79 லட்சத்தை அனுப்பி வைத்தார். இது குறித்து ஒரு வாரம் யாரிடமும் சொல்லவில்லை. சமீபத்தில் தனக்கு நெருக்கமானவரிடம் இது குறித்து நடிகை பகிர்ந்து கொண்டார். அதன் பிறகுதான் இவை அனைத்தும் மோசடி என்று நடிகைக்கு தெரிய வந்தது. இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கதார் 2 படத்தில் நடித்துள்ள நடிகர் ராகேஷ் பேடி என்பவரும் ஆன்லைன் மோசடிப் பேர்வழிகளிடம் ரூ.85 ஆயிரத்தை இழந்துள்ளார். ராகேஷ் பேடி புனேயில் உள்ள தனது வீடு ஒன்றை விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து இருந்தார். அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு ஆதித்யா குமார் என்பவர் தொடர்பு கொண்டார். அவர் தன்னை ராணுவ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இது குறித்து ராகேஷ் பேடி கூறுகையில்,” இதற்கு முன்பு ராணுவ அதிகாரி ஒருவரிடம் வீடு ஒன்றை விற்பனை செய்திருந்தேன். எனவே இப்போது என்னை தொடர்பு கொண்டவர் மீதும் நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நபர் முதல் கட்டமாக எனக்கு ரூ.50 ஆயிரம் அனுப்பினார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் எனக்கு போன் செய்து ராணுவ வங்கிக்கணக்கில் இருந்து அனுப்பிவிட்டேன். அந்த பணத்தை எனக்கு திரும்ப அனுப்புங்கள். நான் வேறு ஒரு வங்கிக்கணக்கில் இருந்து அனுப்புவதாக தெரிவித்தார். நானும் ஒரு முறை 25 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் என இரண்டு முறை அனுப்பினேன். இடைப்பட்ட நேரத்தில் எனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.85 எடுத்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.