ராமநாதபுரம்: குவைத் சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்க அவர்களது குடும்பத்தினர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஜேசு(40), கார்த்திக்(22), மோர்பண்ணையைச் சேர்ந்த சந்துரு(22), தொண்டி அருகே பாசிபட்டினத்தைச் சேர்ந்த வினோத்குமார்(22) ஆகியோர், 3 மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கடந்த மாதம் 5-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்நாட்டு கடலோர காவல்படையினர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நான்கு பேரையும் மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் இன்று 4 மணி நேரம் காத்திருந்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வுக்கூட்டம் முடித்த பின் கண்ணீர் மல்க, சிறையில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மனு அளித்தனர். அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சந்துருவின் தாய் அமுதவள்ளி கூறும்போது, எனது மகன் உள்ளிட்ட 4 பேரும் குவைத் நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றனர். அங்கு சர்க் எனும் நகரில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி விசைப்படகில் சந்துரு உள்ளிட்ட 4 பேர் மற்றும் ஈரான் நாட்டின் மசிறி நகரைச் சேர்ந்தவர் ஒருவர் என 5 பேரும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குவைத் கடலோர காவல்படையினர் விசைப்படகில் இருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்தவரிடம் இருந்து போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
அவரை கைது செய்ததுடன், சந்துரு உள்ளிட்ட 4 பேரையும் சேர்த்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக எனது மகன் போனில் தெரிவித்தார். எனது மகன் உள்ளிட்ட 4 பேருக்கும் குவைத் நாட்டின் மொழி மற்றும் சட்ட நடைமுறைகள் தெரியாது. எனவே ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் செய்த தவறுக்கு, எந்த தவறும் செய்யாத நான்கு பேர் சிறையில் உள்ளனர். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.