குஜராத் மாநிலத்தில், 2002-ல் அப்போதைய முதலமைச்சர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நிகழ்ந்த கோத்ரா ரயில் சம்பவமும், அதன்பின் நடந்த கலவரமும் இந்திய வரலாற்றின் அழியா கறுப்பு பக்கங்களாக இருக்கிறது. இந்தக் கலவரத்தில் மட்டும், 700-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், 250-க்கும் மேற்பட்ட இந்துக்களும் உயிரிழந்தனர். அதிலும் குறிப்பாக, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு, கலவரக்காரர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தின்போது, அவரின் மூன்று வயது குழந்தை உட்பட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இந்த சம்பவம் வெளியே தெரியவந்து, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 2008-ல் பில்கிஸ் பானுவுக்கு நீதி கிடைக்கும் வகையில், இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதோடு, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், அரசு வேலையும், பாதுகாப்பான வீடும் குஜராத் அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், பில்கிஸ் பானுவுக்கு கிடைத்த நீதி கானல் நீராகும் வகையில், அந்த 11 குற்றவாளிகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட நன்னடத்தைப் பெயரில் 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு அந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்தது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமை வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை, 14 ஆண்டுகளில் குஜராத் அரசு தாமாக முன்வந்து விடுதலை செய்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பா.ஜ.க அரசுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

அதன்தொர்ச்சியாக, உச்ச நீதிமன்றத்தில் 11 குற்றவாளிகளின் விடுதலைக்கெதிராக மனுக்கள் குவிந்தன. குறிப்பாக, பில்கிஸ் பானு உட்பட இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு, அதன் பொதுச் செயலாளர் அன்னி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால், சமூக ஆர்வலரும் பேராசிரியருமான ரூப் ரேகா வர்மா, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளையும் விடுவித்ததற்கான ஆவணங்களை சமர்புக்குமாறு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் உத்தரவிட்டது. பின்னர், 11 நாள் விசாரணைக்குப் பிறகு அக்டோபர் 12 தேதியன்று தீர்ப்பை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் 11 குற்றவாளிகளின் விடுதலைக்கெதிரான வழக்கில் இன்று தீர்ப்புக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளை முன்விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, 11 குற்றவாளிகளின் முன்விடுதலையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.