சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் பேச்சும், செயல்பாடுகளும் பல நேரங்களில் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு எதிரானதாக இருக்கிறது. சமீபத்தில் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாகக் கூறி, ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. அப்போது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் கார்த்தி சிதம்பரம், தான் விளையாடியது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது.

இதற்கிடையில் அண்மையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கார்த்தி சிதம்பரம், “நரேந்திர மோடிக்கு நிகரான தலைவராக ராகுல் காந்தியைக் கருத முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தப் பிரச்னையும் இல்லை” எனக் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இதில் ராமசாமி தரப்புக்குத்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவு கொடுத்து வருகிறார். முன்னதாக தலைவர் பதவியைப் பிடிக்கும் வரை சிதம்பரம் அணியிலிருந்த அழகிரி, பின்னர் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு கார்த்தி சிதம்பரம் காய் நகர்த்தி வருவதுதான் காரணம்.

இவ்வாறு இரண்டு தரப்புக்கும் இடையில் மோதல் இருந்து வரும் சூழலில், சிவகங்கை மாவட்டத் தலைவராக இருந்த சத்தியமூர்த்தியை மாற்றிவிட்டு, தனது ஆதரவாளர் சஞ்சய் காந்தியை அந்தப் பதவிக்குக் கொண்டுவந்தது சிதம்பரம் தரப்பு. கே.ஆர்.ராமசாமி, கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளர்தான் சத்தியமூர்த்தி. மேலும் டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், சோனியா தமிழகம் வந்தபோது நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், ‘அழகிரியை உடனடியாக மாற்ற வேண்டும்’ என கார்த்தி சிதம்பரம் பேசியிருந்தார்.
இவ்வாறு தலைவர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்பரம் தீவிரமாகக் காய் நகர்த்துவது, அழகிரி தரப்பைக் கொதிப்பின் உச்சத்தில் வைத்திருந்தது. இந்தச் சூழலில்தான் ஊடகம் ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார் கார்த்தி சிதம்பரம். அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட அழகிரி தரப்பு, கே.ஆர்.ராமசாமி மூலமாக நோட்டீஸ் அனுப்பி, ஆடுபுலி ஆட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறது” என்றனர் விரிவாக.

இது குறித்து கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டபோது, “எனக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அதற்கான அதிகாரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு இல்லை” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.