ஜெய்ஸ்வால் vs சுப்மான் கில்… ரோஹித் சர்மாவின் சாய்ஸ் இவருதான் – காரணம் என்ன?

IND vs AFG 2nd T20 Playing XI: ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை (IND vs AFG T20 Series) விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டி கடந்த ஜன. 11ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி (Team India) 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது.

IND vs AFG: விராட் கோலி என்ட்ரி

வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு (ICC T20 World Cup 2024) முன் நடைபெற உள்ள கடைசி டி20ஐ தொடர் என்பதால் இந்த தொடரில் இந்திய அணி பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் என கூறப்பட்டது. அந்த வகையில் முதல் டி20 போட்டியில் துபேவுக்கு வாய்ப்பளித்தது, அனுபவம் மிகுந்த சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பளித்தது என நீண்டகால திட்டத்தை இந்திய அணி கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிந்தது. அந்த வகையில், இன்றைய போட்டியில் விராட் கோலி (Virat Kohli) என்ட்ரி ஆக உள்ளதால் என்னென்ன மாற்றங்கள் வரும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். 

#TeamIndia  #INDvAFG T20I in Indore@IDFCFIRSTBank pic.twitter.com/CmZEs3d3io

— BCCI (@BCCI) January 13, 2024

IND vs AFG: இந்திய இடது – வலது காம்பினேஷன்

விராட் கோலி வழக்கம்போல் நம்பர் 3 இடத்தில் இறங்கி விளையாடுவார் என கூறப்படுகிறது. எனவே, திலக் வர்மா (Tilak Varna) அமரவைக்கப்படலாம் என பலரும் கருதுகின்றனர். அப்படி திலக் வர்மா கழட்டிவிடப்பட்டால் ஓப்பனிங்கில் ரோஹித் சர்மா உடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) களமிறக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர். ஏனென்றால், இடதுகை பேட்டர் டாப் 3இல் ஒருவர் இருப்பது இந்திய அணியின் திட்டங்களில் ஒன்று. அந்த வகையில், ரோஹித் – சுப்மான் – விராட் – தூபே என்ற பார்முலாவுக்கு பதில், ரோஹித் – ஜெய்ஸ்வால் – விராட் – தூபே என்ற பார்முலாதான் இடது – வலது காம்பினேஷனை சரியாக வைத்திருக்கும் எனவும் கணிக்கின்றனர். 

IND vs AFG: சுப்மான் கில் vs யஷஸ்வி ஜெய்ஸ்வால்

மேலும், கடந்த சில போட்டிகளாக சுப்மான் கில்லின் (Shubman Gill) பார்ம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளதும் அவரை அமரவைக்க முக்கிய காரணங்களுள் ஒன்றாகிறது. ஜெய்ஸ்வால் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ரன்களை குவிப்பதில் பெயர் பெற்றவர், அதுவும் சொந்த மண்ணில் விளையாடுவதால் ரோஹித் சர்மா (Rohit Sharma), தற்போதைய சூழலில் சுப்மான் கில்லுக்கு பதில் ஜெய்ஸ்வாலையே தனது ஓப்பனிங் பார்ட்னராக தேர்வு செய்வார் என கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் அணிக்கு திரும்பும்போது, அவர்களுக்கு சமமான பேக்அப் வீரர்களை பாதுகாத்து வைப்பதும் இந்திய அணி நிர்வாகத்திற்கு முக்கிய பொறுப்பாகும். 

இன்றைய போட்டி மாலை 7 மணிக்கு தொடங்கும் நிலையில், 6.30 மணிக்கு டாஸ் வீசப்பட்டு இரு அணிகளின் பிளேயிங் லெவனும் அறிவிக்கப்படும். ஓடிடியில் ஜியோ சினிமா தளத்திலும், தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் ஆங்கிலம் மற்றும் பல்வேறு பிராந்திய மொழிகளில் நேரலையில் காணலாம். இந்த தொடரின் மூன்றாவது போட்டி வரும் ஜன. 17ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.