Masala tea at a roadside shop French President, Modi excited | சாலையோர கடையில் மசாலா டீ பிரான்ஸ் அதிபர், மோடி உற்சாகம்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு, திறந்த ஜீப்பில் ஜெய்ப்பூர் நகரத்தை சுற்றிக்காட்டிய பிரதமர் மோடி, சாலையோர கடையில் அவருக்கு மசாலா டீ வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தார்.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நம் நாட்டுக்கு வந்துஉள்ளார்.

உற்சாக வரவேற்பு

பிரான்சில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு நேற்று மதியம் வந்திறங்கினார்.

அவரை ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூரின் ஆம்பர் அரண்மனைக்கு வந்த மேக்ரானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அரண்மனையை சுற்றிப் பார்த்தார்.

உத்தர பிரதேசத்தில் இருந்து நேரடியாக ராஜஸ்தான் வந்த பிரதமர் மோடி, அங்குஉள்ள ஜந்தர் மந்தரில் பிரான்ஸ் அதிபரை சந்தித்தார்.

அதன் அருகே உள்ள 18ம் நுாற்றாண்டு விண்வெளி ஆய்வுக் கூடத்தை இருவரும் சுற்றிப் பார்த்தனர். இதை பாரம்பரிய கட்டடமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

அதன் பின், ஜெய்ப்பூர் நகரை சுற்றிப் பார்ப்பதற்காக, அதிபர் மேக்ரானை திறந்தவெளி ஜீப்பில் பிரதமர் அழைத்து சென்றார்.

இருவரும் ஹவா மஹால் முன் இறங்கி, 1,000 ஜன்னல்கள் உடைய அந்த மாளிகையின் அழகை கண்டு ரசித்தனர்.

அதன் அருகே இருந்த கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குள் இருநாட்டு தலைவர்களும் சென்றனர்.

அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த அயோத்தி ராமர் கோவில் மாதிரியை வாங்கி, மேக்ரானுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். அதற்கான தொகையாக 500 ரூபாயை, ‘டிஜிட்டல்’ பணப்பரிவர்த்தனை வாயிலாக பிரதமர் செலுத்தினார்.

‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை

கடையை விட்டு வெளியே வந்ததும், அங்குள்ள சிறிய டீ கடையில் நின்ற பிரதமர் மோடி, அதிபர் மேக்ரானுக்கு சூடான மசாலா டீ வாங்கிக் கொடுத்தார்.

டீக்கு பணம் பெற்றுக் கொள்ள கடைக்காரர் மறுத்தார். பிரதமர் வலியுத்தி சொன்னதும், 2 ரூபாய் தரும்படி கூறினார். அந்த தொகையையும், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை வாயிலாகவே பிரதமர் செலுத்தினார்.

மீண்டும் ஜீப்பில் ஏறிய தலைவர்கள், சங்கனேரி கேட் வரை தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். அங்கிருந்து ராம்பாக் அரண்மனைக்கு வந்த இருவரும் அங்கு இரவு உணவு சாப்பிட்டு விட்டு இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.