இந்தியா முழுவதும் இன்று குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு 2024-ம் ஆண்டுக்கான ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது’ வழங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். இதில் முக்கியமானது ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க’ விருது. இந்த ஆண்டு இந்த விருது AltNews-ன் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு தமிழ்நாடு அரசு வழங்கி கௌரவித்திருக்கிறது.
கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது:
கோவையில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கோட்டை அமீர். பிறப்பால் இஸ்லாமியர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்துக்காக வாழ்ந்தவர். நாட்டையே அதிரவைத்த பாபர் மசூதி சம்பவத்தின்போது, தன்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமலும் மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர். இந்து – முஸ்லிம் கலவரத்தைக் கட்டுப்படுத்த அமைதிக் குழு அமைத்து, அதற்கு அவரே தலைவராகவும் இருந்தார்.

மசூதி மட்டுமல்ல, இந்து கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும்கூட அமீருக்கு நல்ல மரியாதை இருந்தது. இது பிடிக்காத சிலர், 1994-ம் ஆண்டு அவரைக் கொடூரமாகக் கொலைசெய்தனர். இதையடுத்து, கோட்டை அமீரின் பெயரில், “ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கப்படும்” என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
மத நல்லிணக்க விருது பெற்ற முகமது ஜுபைர்:
முகமது ஜுபைர் 1983, 29 டிசம்பர் மாதம் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் பிறந்தார். எம்.எஸ். ராமையா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பட்டம் பெற்ற அவர், மென்பொருள் பொறியாளராகப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார். 2017-ம் ஆண்டு சக முன்னாள் மென்பொருள் பொறியாளர் பிரதிக் சின்ஹா-வுடன் இணைந்து, உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான Alt News நிறுவனத்தை உருவாக்கி போலிச் செய்திகளை எதிர்த்துப் போராடினர்.

இதற்கிடையில், சர்ச்சைக் கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மா விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானது. இந்த விவகாரம் தொடர்பாக முகமது ஜுபைர் மத்திய பா.ஜ.க அரசால் 2022-ல் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். முகமது ஜுபைர் கைதுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, Editors Guild of India எனும் பத்திரிக்கையாளர் அமைப்பு, டிஜிட்டல் செய்தி ஊடக நிறுவனங்களின் அமைப்பான DIGIPUB-யும், ஐ.நாவின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸின், ஜெர்மனி அரசு ஆகியவை கடும் கண்டங்களைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த நிலையில், போலிச் செய்திகளுக்கு எதிராகப் போராடி, மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படும் Alt News நிறுவனத்தின் இணை நிறுவனம் முகமது ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY