புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி, ஞானவாபி
வளாகம் அமைந்துள்ளது.
இங்கு ஹிந்து கோவிலை இடித்து, மசூதி கட்டப்பட்டு உள்ளதாகவும், அங்கு ஆய்வு நடத்தக் கோரியும் ஹிந்துக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதன்படி, ஞானவாபி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர், சமீபத்தில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
அதில், கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான தடயங்களும் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஹிந்து அமைப்பினர் தரப்பு வழக்கறிஞர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வி.எச்.பி., அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:
பிரமாண்ட கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருப்பதற்கான சான்றுகளை, இந்திய தொல்லியல் துறையினர் சமர்ப்பித்துள்ளனர்.
எனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின்படி, ஞானவாபி வளாகத்தை ஹிந்து கோவிலாக அறிவிக்க வேண்டும். இந்த வளாகத்தை முஸ்லிம் அமைப்பினர் வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டும். காசி விஸ்வநாதரின் உண்மையான இடத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், ‘வஜுகானா’ எனப்படும், தொழுகைக்கு முன் கை கழுவ பயன்படும் தொட்டி அமைந்திருக்கும் இடத்தில், சிவ பெருமானுக்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement