பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பல ஆண்டுகளாக இந்தியாவில் அதன் சேவையை வழங்கி வருகிறது. மொபைல் போன்கள் தொடங்கி, வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தற்போது ஆன்லைனில் டெலிவரி செய்து வருகிறது. பொதுவாக இது போன்ற ஆன்லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்தால் நமது பகுதிக்கேற்ப நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி காலையில் ஆர்டர் செய்தால் அன்று இரவுக்குள் வீட்டிற்கு அந்த குறிப்பிட்ட பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
” ஒரே நாளில் டெலிவரி வேண்டும் என்று நினைக்கும் பொருள்களை மதியம் 12 மணிக்குள் ஆர்டர் செய்ய வேண்டும். அந்த ஆர்டர் அன்று இரவு 12 மணிக்குள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு போய் சேரும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்ரோ, பெருநகரம் அல்லாத இடங்களிலும் இந்த ஒரே நாளில் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை நடைமுறைபடுத்த உள்ளதாவும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக அகமதாபாத், பெங்களூர், புவனேஷ்வர், கோயம்புத்தூர், சென்னை, டெல்லி, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, லூதியானா, மும்பை, நாக்பூர், புனே, பாட்னா, ராய்ப்பூர், சிலிகுரி மற்றும் விஜயவாடா. உட்பட 20 நகரங்களில் இந்த திட்டம் கொண்டுவர பட உள்ளது. பின்னர் ஒவ்வொரு நகரமாக விரிவு செய்யப்படும்.
“மெட்ரோ நகரங்களில் ஏற்கனவே மிக விரைவான டெலிவரி சேவையை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதே போல மெட்ரோ அல்லாத சிறுநகரங்களிலும் இந்த சேவையை கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளோம். அதன்படி ஒரே நாளில் டெலிவரி செய்யும் சேவைகள் முதற்கட்டமாக 20 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. பின்பு படிப்படியாக அனைத்து நகரங்களுக்கும் செயல்படுத்தப்படும், வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை அதிகப்படுத்த இந்த நடைமுறையை மேற்கொண்டு உள்ளோம்” என்று ஃபிலிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொபைல் போன்கள், பேஷன் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், புத்தகங்கள், சமையல் அறை பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்கள் ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதற்காக பெரும் முதலீடையும் செய்துள்ளது பிளிப்கார்ட்.
வால்மார்ட் நிறுவனம் 2014ம் ஆண்டு 10 நகரங்களில் ஒரே நாளில் டெலிவரி செய்யும் திட்டத்தை தொடங்கியது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து 200 ரூபாய் ஷிப்பிங் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் இதனை சரியான முறையில் டெலிவரி செய்ய இயலாததால் இதனை பின்னர் கைவிட்டது. இப்போது மீண்டும் பிளிப்கார்ட் நிறுவனம் இதனை கையில் எடுத்துள்ளது. இதற்காக தற்போது சுமார் 22,000 பணியாளர்களை புதிதாக பணிக்கு எடுத்துள்ளது. அமேசான் நிறுவனம் இந்த சேவையை ஏற்கனவே கொடுத்து வருகிறது. பிரைம் கஸ்டமர்களுக்கு மட்டும் தற்சமயம் உடனடி டெலிவரி சேவை வழங்கப்பட்டு வருகிறது.