SBI seeking time for details of election papers | தேர்தல் பத்திரங்கள் விபரம் அவகாசம் கோரும் எஸ்.பி.ஐ.,

புதுடில்லி, மார்ச் 5-

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற பணம் குறித்த விபரங்களை வெளியிட, ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், எஸ்.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம், 2018ல் அமலுக்கு வந்தது.

இதன்படி, நம் நாட்டைச் சேர்ந்த தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்களை வழங்கலாம்; இதில் அவர்களது விபரம் ரகசியம் காக்கப்படும்.

தேர்தல் பத்திரங்கள், பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன.

இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, பிப்., 15ல் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்ட விரோதமானது எனக் கூறி ரத்து செய்தது.

மார்ச் 6ம் தேதிக்குள், இத்திட்டத்தின் வாயிலாக அரசியல் கட்சிகள் பெற்ற பணம் குறித்த விபரங்கள் மற்றும் நன்கொடை அளித்தோரின் பெயர்களை வெளியிடும்படி, எஸ்.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் விபரங்களை வெளியிட, ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கக் கோரி, எஸ்.பி.ஐ., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.