சென்னை: கஞ்சா விற்பனையில் முன்விரோதம்; இளைஞர் கடத்திக் கொலை!

சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மகன் கருக்கா ஸ்டீபன் (23). இவரை கடந்த 7-ம் தேதி மாலை 4 மணியளவில் ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றிருக்கிறது. அதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டீபனின் சகோதரர் ஜஸ்டின் என்பவர் காவல் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீஸார், அந்த காரை தேடிவந்தனர். கடத்தல் சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. ரோந்துப் பணியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த கார் மாங்காடு காவல் நிலையத்துக்குட்பட்ட மலையம்பாக்கம் பகுதியில் நிற்பதாக மாங்காடு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் கார் நின்ற இடத்துக்குச் சென்றனர். அப்போது மதுபோதையிலிருந்த இரண்டு பேர் போலீஸாரைப் பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

கொலை

அவர்களை மாங்காடு போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது கருக்கா ஸ்டீபனை கொலைசெய்து முட்புதரில் வீசிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சடலமாக கிடந்த கருக்கா ஸ்டீபனை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போதையிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்களின் பெயர் ஈசாக் (19), விக்னேஷ் (19) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் வடக்கு மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது இந்தக் கொலை வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் தப்பி ஓடிவிட்டதாக ஈசாக்கும் வினோத்தும் போலீஸாரிடம் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் தலைமறைவாக இருப்பவர்களைத் தேடி வருகிறார்கள்.

இது குறித்து மாங்காடு போலீஸார் கூறுகையில், “கொலைசெய்யப்பட்ட கருக்கா ஸ்டீபனுக்கும் மாங்காடு மலையம்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் இடையே கஞ்சா விற்பனை உட்பட சில காரணங்களால் முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கருக்கா ஸ்டீபனின் செல்போனை பிரவீன் தரப்பு பறித்துச் சென்றது. அதனால் ஆத்திரமடைந்த ஸ்டீபன் தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று பிரவீனை சரமாரியாக வெட்டினார். இதில் காயமடைந்த பிரவீன் உயிர்பிழைத்துக் கொண்டார். இது தொடர்பான புகாரில் ஸ்டீபனின் கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஸ்டீபனை போலீஸார் தேடிவந்தனர்.

கைது

இந்த நிலையில் பிரவீனைக் கொலைசெய்ய முயன்றதால் ஆத்திரமடைந்த அவரின் கூட்டாளிகள் பிளான் போட்டு ஸ்டீபனை காரில் கடத்திச் சென்று கொலைசெய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.