தேர்தல், பிரீமியர் லீக் கிரிக்கெட் : சிக்கலில் சினிமா

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகமான படங்கள் வெளிவரும். குறிப்பாக ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் முக்கியமான பெரிய படங்கள் வெளிவரும். காரணம் இந்த மாதங்கள்தான் பள்ளி விடுமுறை மாதங்கள். மக்கள் குடும்பத்தோடு மினி டூராக சினிமாவுக்குத்தான் வருவார்கள். அதனால் ஓரளவுக்கு சுமாரன படங்கள்கூட கல்லா கட்டும். ஆனால் தற்போது பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், மற்றும் தேர்தல் காரணமாக சினிமாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே நிலமைதான் இந்தியாவின் அனைத்து மொழி சினிமாவுக்கும்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த 17வது பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த கிரிக்கெட் விழா வருகிற மே 29ம் தேதிதான் முடிவுக்கு வருகிறது. மொத்தம் 74 போட்டிகள் நடக்க இருக்கிறது. ஆக தியேட்டர்களை நிரப்பும் இளைஞர் பட்டாளம் ஏப்ரல், மே இருமாதங்களும் கேலரிகளை நிரப்ப இருக்கிறது.

அடுத்து பார்லிமென்ட் தேர்தல் பணிகள் இப்போதே தொடங்கி விட்டது. பிரச்சாரம் சூடு பிடித்து விட்டது. மீடியாக்களில் தேர்தல் செய்திகளே முதலிடம் பிடித்திருக்கிறது. வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட ஓட்டுபதிவு நடக்கிறது. கடைசிகட்ட ஓட்டுபதிவு ஜூன்1ம் தேதி நடக்கிறது. ஆக தேர்தலும் ஏப்ரல், மே மாதங்களை எடுத்துக் கொள்கிறது.

எனவே இந்த இரண்டு மாதங்களும் சினிமாவிற்கு சோதனையான காலமாகும். தமிழ் புத்தாண்டுக்கு பெரிய படங்கள் எதுவும் வெளிவராது என்றே தெரிகிறது. அதேபோல வருகிற 2 மாதமும் எந்த பெரிய பட்ஜெட் படமும் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்படவில்லை. இதனை பயன்படுத்தி சிறிய பட்ஜெட் படங்கள் அதிக அளவில் வெளிவரலாம். கூடுதலாக ஹிட் அடித்த பழைய படங்கள் ரீ -ரிலீஸ் ஆகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.