கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பெட்டாலியன் போலீஸார் 20 பேரில் 13 பேர், உணவு சாப்பிட, வனப்பகுதியை விட்டு வெளியேறினர். அதில் 7 பேர் மாயமானதாக தகவல் பரவியது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறை அதனை மறுத்துள்ளனர். “கரியலூர் கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்குச் சென்ற 7 போலீஸார் மாயம் என்ற செய்தி பரவி வருகிறது. மேற்படி 7 நபர்கள் சாராய வேட்டை முடித்து ஓய்வுக்காக சிறிது நேரம் அமர்ந்து விட்டு தாமதமாக வந்துள்ளனர். அனைவரும் இருப்பிடம் திரும்பி விட்டனர். அனைவரும் நலமாக உள்ளனர். தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்
கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பெட்டாலியன் போலீஸார் உள்ளிட்டோர் சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வராயன் மலையில் முகாமிட்ட சாராய வியாபாரிகளை கைது செய்தும் வருகின்றனர்
இந்த நிலையில், சாராய வேட்டைக்குச் சென்ற 7 பேரும் 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் வெளியே வராததால் போலீஸார் அச்சம் அடைந்தனர். அவர்கள் 7 பேரும் திருச்சி பட்டாலியனை சேர்ந்தவர்கள் ஆவர்.