கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் கள்ளச் சாராயம் அருந்தியதால் தான் உயிரிழந்தனர் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரது உடல் இன்று (ஞாயிற்றுகிழமை) தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரிக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் மற்றும் இளையராஜா ஆகியோர் கடந்த 18-ம் தேதியே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அவர்களது உறவினர்கள் ஜெயமுருகனின் (45) உடலை அடக்கம் செய்துள்ளனர். இளைராஜாவின் உடல் தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து 19 -ம் தேதி பலர் உயிரிழக்க, ஜெயமுருகனும், இளையராஜாவும் கள்ளச்சாராயத்தால் தான் உயிரிழந்ததனர் என்பதை அறியவில்லை எனவும்ந, அதனால் அவர்களுக்கு நிவாரணம் வேண்டும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அடக்கம் செய்யப்பட்ட ஜெயமுருகனின் உடலை இன்று தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவுசெய்துள்ளது. இதேபோன்று இளையராஜாவும் கள்ளச்சாராயம் அருந்தியதால் தான் உயிரிழந்தார் என அவரது மனைவியும் மனு அளித்திருத்தார். ஆனால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதால், விசாரணை நடத்தி வருகின்றனர்.