நாடு முழுவதும் டிரம்ப்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் டிரம்ப் அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். செலவின குறைப்பு நடவடிக்கையாக இத்தகைய முடிவுகளை டிரம்ப் நிர்வாகம் எடுத்தது.

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தொழிலாளர் அமைப்புகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க பெடரல் கோர்ட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.ஜனாதிபதி டிரம்ப் பதவி ஏற்றது முதல் அரசு ஊழியர்கள் சுமார் 2,00,000 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற முடிவுகளுக்கு அமெரிக்க மக்கள் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டத்தை துவக்கி உள்ளதாகவும், மீண்டும் ஒரு சுதந்திர புரட்சியை உருவாக்குவோம் என்கின்றனர் போராட்டக்காரர்கள் .

நேற்று சனிக்கிழமை முதல் போராட்டத்தை துவங்கி உள்ளனர். இந்த போராட்டம் 50 மாகாணங்களில் 400 க்கும் மேற்பட்ட பேரணிகள் நடத்தி வருகின்றனர் . பலரும் டிரம்ப்பிற்கு எதிராக பதாகைகள் ஏந்தி போராடி வருகின்றனர். டவுன்டவுன், சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட மாகாணங்களில் ஒரு கோடிக்கும் மேல் போராட்டக்காரர்கள் திரண்டு இருப்பதாக ஒருங்கிணைப்பு கமிட்டியினர் தெரிவிக்கின்றனர்.

ஓரிகானின் போர்ட்லேண்ட் நகர மையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் டிரம்ப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய படியே அணிவகுத்துச் சென்றனர் சான் பிரான்சிஸ்கோவில், பசிபிக் பெருங்கடலை ஒட்டிய மணல் கடற்கரையில் நூற்றுக்கணக்கானவர்கள் “இம்பீச் & ரிமூவ்” என்ற வார்த்தைகளை உச்சரித்தனர். மேலும் தலைகீழாக அமெரிக்கக் கொடியை பிடித்து இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், டிரம்ப்பின் பாசிச ஆட்சி இப்போது ஒழிய வேண்டும் அவர் நீதிமன்றங்களை மீறுகிறார் என்று கூறினார். நாடு முழுவதும் இன்னும் போராட்டங்கள் வலுக்கும் என்பதால் டிரம்ப் நிர்வாகம் அதிர்ந்து போய் உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.