கரூர்: கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தைச் சேர்ந்தவர் பிரபு(40). கற்றாழையை கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா, மகள் தியா(10), மகன் ரிதன்(3).
இந்நிலையில், பிரபு, மனைவி மதுமிதா, குழந்தைகள், மாமனார் முத்து கிருஷ்ணன்(61) ஆகியோருடன் ஏப். 17-ம் தேதி கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு படா பஜார் ரபிந்தரசரணி பகுதியில் 5 தளங்கள் கொண்ட ஹோட்டலில் குடும்பத்தினர் அனைவரும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், இரவு உணவு வாங்கு வதற்காக பிரபுவும், அவரது மனைவியும் வெளியே சென்றுள்ளனர். அந்நேரத்தில் மின் கசிவு காரணமாக ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். இதில் முத்துகிருஷ்ணன், அவரது பேரக் குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
முதல்வர் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு அரசு துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.