கொல்கத்தாவுக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி… ரியான் பராக் கருத்து

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 57 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ரியான் பராக் 95 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் ராஜஸ்தான் கேப்டன் பராக் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் கடைசி வரை நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்ற திட்டத்தை தான் வைத்திருந்தேன். ஆனால் 18-வது ஓவரில் நான் ஆட்டமிழந்தது என்னுடைய அணி தோல்வியை சந்தித்ததற்கு மிக முக்கியமான காரணமாக நினைக்கிறேன். கடைசி 6 ஓவர்களின் போது சரியான திட்டமிடல் வேண்டும்.

அதற்கான வழிகளையும் நாங்கள் கண்டறிய வேண்டும் என்று நினைக்கிறேன். பந்துவீச்சிலும் கூடுதல் மாற்றங்கள் தேவைப்படுவதாக நினைக்கிறேன். எந்த ஒரு வீரரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஆனால், பல்வேறு விசயங்களில் முன்னேற்றத்தை காண வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த போட்டியில் ரசல் ஆடிய இன்னிங்ஸ் கொல்கத்தா அணிக்கு முமென்ட்டத்தை கொடுத்தது. நாங்களும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக தான் செயல்பட்டோம். ஆனால், இறுதியில் எங்கள் அணி தோல்வியை சந்தித்ததில் மிகவும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.