விழுப்புரம்: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு செல்லும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வழியாக வாகனங்களில் தொண்டர்கள் சென்றபோது, கலவரம் வெடித்தது. பாமகவைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். வீடுகள், வாகனங்கள் மற்றும் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பாமக மற்றும் விசிகவினர் மீது பல வழக்குகள் பதிவாகின.
பாமகவினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரத்தில் போராட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாசை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இதனால் விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உட்பட மாநிலம் முழுவதும் தொடர் கலவரம் மூண்டது. அரசு மற்றும் தனியார் பேருந்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. பாமகவினர் மீது மாநிலம் முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின.
இதன் எதிரொலியாக, வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு தமிழக காவல்துறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில் முதற்கட்டமாக, கிழக்கு கடற்கரை சாலையில் பாமக வாகனங்கள் செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் வரை 95 கி.மீ., தொலைவுக்கு பாமக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல், வாகனங்களில் செல்பவர்கள் முழக்கமிடக்கூடாது, ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது, வாகனங்களில் செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது, பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாமல்லபுரத்தில் 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க முழுநிலவு பெருவிழாவுக்கு பல்வேறு வாகனங்களில், அக்கட்சியினர் சென்றனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இரண்டு சமூக மக்களிடையே கலவரம் ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டக்குப்பத்தில் இருந்து தாளங்காடு வரை 39 கி.மீ., தொலைவு உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மாநாட்டுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம் வழியாக மாமல்லபுரத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த வேண்டாம் என, அம்மாவட்ட காவல்துறையும் அறிவுரை வழங்கி உள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் கூட்டம் நடத்தப்பட்டு, உள்ளூர் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பாமக தலைமையிடமும் தெரிவித்துள்ளோம். கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கவில்லை. மாறாக, அறிவுரையை வழங்கி உள்ளோம். இதை தவிர்த்து, வேறு எந்த கட்டுபாடுகளையும் காவல்துறையினர் விதிக்கவில்லை” என்றார்.