திருவனந்தபுரம்: “பாகிஸ்தான் தனக்கு சாதகமான சூழல் இருப்பதாக கருதி இருக்கும். ஆனால், ஐ.நா பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பலரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட கடினமான கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது” என்று திங்கள்கிழமை இரவு நடந்த ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி சசிதரூர் விளக்கியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் திங்கள்கிழமை இரவு கூடிய நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை செயல்பாடுகள் குறித்த அனுபவம் வாய்ந்தவருமான சசி தரூர் அங்கு நடந்த ‘சோக யதார்த்தம்’ குறித்து விளக்கினார். பாதுகாப்பு குழு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து தனக்கு தெரிந்த தகவல்களை வைத்து பேசிய சசி தரூர், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தையும் பாதுகாப்புக் குழு நிறைவேற்றாது என்று தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “பாகிஸ்தானுக்கு எதிரான எந்த ஒரு தீர்மானத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு நிறைவேற்றாது. ஏனெனில், அதனை சீனா தனது வீட்டோ பவர் மூலம் கையாளும். பல நாடுகள் எதிர்க்கும் என்பதால், இந்தியாவுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றாது. பாதுகாப்புக் குழுவில் நடந்த விவாதங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. அதிகாரபூர்வமற்ற விளக்கங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. இதுபோன்ற கூட்டங்களை உள் அறை (closed-door) விவாதங்கள் என்று அழைக்கிறோம். அப்படியான விவாதங்கள் பலவற்றில் நானும் இருந்திருக்கிறேன்.
பாதுகாப்புக் குழுவில் உள்ள 15 உறுப்பினர்களில் அவர்களும் (பாகிஸ்தான்) ஒருவர். இந்தியா அந்த அறையில் இல்லை. அதனால், தங்களுக்கு ஒரு சாதமான சூழல் இருப்பதாக பாகிஸ்தான் நினைத்திருக்கும். ஆனால், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பயங்கரவாதம் குறித்து உறுப்பினர்கள் கடுமையான கேள்விகள் கேட்டதால் கூட்டம், பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையவில்லை என்று தெரிகிறது. அதேபோல் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதில், புரிந்துகொள்ளும் வகையில் தூண்டப்பட்டது என்பதை சர்வதேச சமூகம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானும் ஒரு தரப்பு என்பதால், இந்தியாவின் கருத்தினைக் கேட்காமல், பாகிஸ்தானின் கருத்தை மட்டும் கேட்டு ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது என்று சில உறுப்பினர்கள் கூறியிருக்கலாம். அதனால், சில உறுப்பினர்கள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு பரிந்துரைத்திருக்கலாம்” என்று காங்கிரஸ் எம்.பி தெரிவித்தார்.
ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டம்: ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுவின் உள்அறை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள், இருநாடுகளும் தங்களுக்கு இடையேயான பதற்றத்தை தணித்துக் கொள்ள வலியுறுத்தின. மேலும் நேரடிபேச்சுவார்த்தை மூலம் இந்தியாவுடனான பிரச்சினைக்கு தீர்வு காண பாகிஸ்தானை ஊக்குவித்தன என்று கூறப்படுகிறது.