தமிழகத்தில் 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 13-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 81 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

தமிழகத்தில் ஒருசில இடங்களில் 11-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 11 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 8 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், விருதுநகர், சாத்தூரில் 7 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மதுரை மாவட்டம் கல்லந்திரி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.